மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 90 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பாக துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தேர்தல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார். பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சிறு சிறு சம்பவங்கள் தொடர்பாகவே கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் என்பனவும் அடங்குகின்றன.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திகதியில் இருந்து கடந்த 5 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் குறைந்தளவு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளே பொலிஸ் தேர்தல் பிரிவுக்கு கிடைத்துள்ளன.
இவை குறித்த துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறைச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றிருப்பதால் தேர்தல் தினத்திலும் குறைந்தளவு சம்பவங்களே இடம்பெறும் என எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.