அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு!

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பொருளாதார மாற்றுச் சட்டம் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டமூலம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (27) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தற்போது ஆணை இல்லாத நாடாளுமன்றம் இருப்பதால், இவ்வாறான சட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் ஆபத்தானது என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அங்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில்,

இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் துரிதமாக தயாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தின் தேவை இன்றைய சமூகத்தில் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலை கண்டு பயந்து பணமில்லை என கூறி தேர்தலை ஒத்திவைக்க முயல்வதாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது தொடர்பில் மக்கள் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த எம்.பி, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *