ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் – அனுர குமார திசாநாயக்க

அரகலயவின் பின்னர் பின்வாங்கிய ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (02) குருநாகலில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரகலயவின் உண்மையான அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்றால் மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றும் அரசாங்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2022 மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாசைகளை உறுதிசெய்யக்கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல்வாதிகள் இன்னமும் அரகலயவிலிருந்து பாடங்களை கற்கவில்லை மாறாக அதனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல்கட்சியுடனும் தங்களை அடையாளப்படுத்தாமல் பொதுவான அபிலாசைகளிற்காக வீதியில் இறங்கினார்கள். அவர்கள் ஊழல் மோசடி அற்ற ஒழுக்கமும் சட்டமும் காணப்படும் நாட்டை எதிர்பார்க்கின்றனர்.

பொதுவான சமூக நோக்கத்திற்காக அவர்கள் வீதியில் இறங்கினார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *