இலங்கையில் ஒரே ஆண்டில் 2300 வீதி விபத்து மரணங்கள்!

கடந்த ஆண்டில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 2321 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  போக்குவரத்துத் துறையில் செயல்திறனை உருவாக்க பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். கடவத்தை பேருந்து நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்தப் பேருந்து நிலையங்களில் நவீன போக்குவரத்து முகாமைத்துவ முறைகளும், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2023 இல் 2214 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளில் 2321 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஜுன் 30 ஆம் திகதி  வரையிலான காலப்பகுதியில்  1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாயை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், போக்குவரத்து அமைச்சின் தலையீட்டுடன், வீதி வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளது.

மேலும், பாடசாலை மட்டத்தில் வீதிப் பாதுகாப்புக் கழகங்களை நிறுவுவதற்கு தேவையான கையேடுகளை ஆசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இது ஒரு இணைச்செயற்பாடாக பாடசாலைக் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இணையாக பதக்கம் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *