நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் !

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (08) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சார்பாக சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த குறித்த சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது வலுவுடையதாக உள்ளது.

குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் துறைசார் நிபுணர்கள் சட்டமூலத்தின் ஒருசில பிரிவுகள் பற்றிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருப்பினும், குழுநிலை விவாதத்தின் போது அவ்வாறான திருத்தங்களை சட்டமூலத்தில் சேர்த்துக் கொள்வதற்கு முடியவில்லை.

அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதையடுத்து அதனை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு கடந்த ஜூலை 22ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய இன்று வியாழக்கிழமை குறித்த திருத்தச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *