தேர்தல் கண்காணிப்பில் 8000 கண்காணிப்பாளர்கள் – இலங்கை வரலாற்றின் அமைதியான தேர்தல் !

உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் சுமார் 8000 கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் நடைபெற்ற நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டதுடன், இன்றைய தினம் தொடர்ந்து நடைபெறவுள்ள வாக்குகள் எண்ணும் செயன்முறையையும் கண்காணிக்கவுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை (21) நடைபெற்றது. அதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

இத்தேர்தல் செயன்முறை சுதந்திரமானதும் நியாயமானதும் முரண்பாடுகள் அற்றதுமான விதத்தில் நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 8000 பேர் நாடளாவிய ரீதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் தலைமையிலான 68 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், பொதுநலவாய அமைப்பின் சார்பில் சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் சார்பில் 10 பேரடங்கிய கண்காணிப்புக் குழுவினரும், சர்வதேச நாடுகளின் சார்பில் சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

அதேபோன்று உள்நாட்டில் இயங்கிவரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (பெப்ரல்) சார்பில் சுமார் 4000 கண்காணிப்பாளர்களும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான பிரசாரத்தின் (கஃபே) சார்பில் 1750 கண்காணிப்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கஃபே அமைப்பினால் 120 நடமாடும் கண்காணிப்பு வாகனங்களும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மாக்கீன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் முக்கிய தேர்தல் மாவட்டங்களை இலக்காகக்கொண்டு 25 நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், அக்குழுக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இக்கண்காணிப்பாளர்கள் அனைவரும் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன்னரான பிரசார செயன்முறைகள், தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு செயன்முறை, வாக்கு எண்ணல் மற்றும் முடிவு அறிவிக்கும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான சூழ்நிலை ஆகியவற்றை பரந்துபட்ட ரீதியில் கண்காணித்து வருகின்றனர்.

அதற்கமைய நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவும், இந்நிலை தொடர்வதன் ஊடாகவே சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிப்படுத்த முடியும் எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை தேர்தல் வரலாற்றில் அமைதியான முறையில் நடைபெற்ற சிறந்த தேர்தல் இதுவென நம்புவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *