2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் பட்டியலில் முழுமையான இலங்கை தீவிலும் அதிகப்படியான நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கொண்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.