தமிழரசுக்கட்சியின் தீர்மானங்களை மீறியோருக்கு கட்சியில் இடமில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களை மீறிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படக் கூடாதெனவும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களில் நியமனங்கள் வழங்கப்படும் விதம் குறித்து தினகரனுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் இது பற்றி விளக்குகையில்,

தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்கள் இதற்கு முன்னரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகக் குறைந்தது அவர்களுக்கு என்றுமே தேர்தல் நியமனம் கொடுக்கப்பட்டதில்லை.

முன்னர் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் எங்களுடைய கட்சி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் எடுத்த சில நாட்களில், மன்னாரைச் சேர்ந்த சிவகரனும், அனந்தி சசிதரனும் அதற்கு மாறாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியதன் காரணமாவே கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

அவ்வாறிருக்க இந்தத் தடவை கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி, பலர் செயற்பட்டிருக்கிறார்கள். ஒரு தீர்மானமல்ல பல தீர்மானங்ளை மீறியிருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென்பது இறுதியாக எடுத்த தீர்மானம். அதற்கு முன்பாகவே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் தெளிவாக நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல பொதுவேட்பாளரை போட்டியிலிருந்து விலகுமாறும் கூட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு பொது வேட்பாளரிடம் விளக்கமும் கோரப்பட்டது. பொதுவேட்பாளருக்கு ஆதாரவாக பிரசாரம் செய்வதற்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம். தீர்மானங்களுக்கு மாறாகச் செயற்பட்டவர்களிடம் விளக்கமும் கோரியிருந்தோம்.

அவர்களுக்கு நியமனம் கொடுக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நியமனக் குழுவே இறுதி முடிவெடுக்கும். நான் தனியாக முடிவெடுக்க முடியாது ஆனால் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், கட்சியின் தீர்மானங்ளை மீறும் எல்லார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *