இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.
தமிழ்த் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்டுவதற்கான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய மேலதிக பேட்டி ஒன்றில் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் ஆளுமையின்மையின் வெளிப்பாடு தான் இன்றைய சுமந்திரனுடைய ஆட்டத்திற்கு காரணம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்தார்.
தலைமைத்துவத்தை சரியாக கையாளாமல் விட்டமையினால் இன்று தமிழரசுக்கட்சி தனியொருவரினுடைய கம்பனியாக மாறிவிட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சுமந்திரனுக்கும் எனக்கும் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் நான் தமிழரசுக் கட்சியினுள் வந்துவிடக் கூடாது என்பதிலும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் சுமந்திரன் விசேடமாக அக்கறையாக உள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். அவருக்கு என்ன தேவையோ அந்த நேரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உலகமே அறிந்ததாகும்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களுக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இவ்வாறு செயற்படுமாக இருந்தால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேணடுமென தெரியும்.“ என தெரிவித்தார்.