9/21: இலங்கையில் நிகழ்ந்த அரசியல் சுனாமி ! வீழ்ச்சியிலிருந்து ஆட்சியை நோக்கி …

செப்ரம்பர் 21, 2024 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சுனாமியை கண்டு மேற்குலகின் தலைநகர்களில் இருந்தவர்களின் புருவங்கள் உயர்ந்தன என்று சர்வதேச மற்றும் நோர்வே ராஜதந்திரியும் அரசியல்வாதியுமான எரிக்சோல்ஹைம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்தை எவ்வாறு கண்ணியமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை மேற்கு நாடுகள் இலங்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்தோடு நீண்டகாலத்திற்குப் பின் இலங்கையில் இனவாதத்திற்கு மதவாதவாதத்திற்கு தீவிரவாதத்திற்கு இடம்கொடுக்காமல் இத்தேர்தல் நடந்தது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகள் அண்மைய எதிர்காலத்தில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்பதை எரிக் சொல்ஹைம் கோடிட்டுக்காட்டியுள்ளார். அமெரிக்க வல்லரசின் ஒரு மென்போக்கு முகமே நோர்வே ராஜதந்திரி எரிக் சொல்ஹைம். அவருடைய பதிவில் “தேர்தல் காலத்தில் ஏகேடி (அனுர குமார திஸ்ஸநாயக்க) இந்தியாவை சீனாவை மேற்குலகையும் தொடர்பில் வைத்திருந்தார்” என்பதையும் குறிப்பிட்டுள்ளார். “ஏகேடி ஒரு தலைவராக வெற்றி பெறவும், இலங்கை வளமான, அமைதியான, பசுமையான நாடாக வருவதற்கும் நாங்கள் உதவ வேண்டும்” என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டுள்ளார். 2001 செப்ரம்பர் 9/11 க்குப் பின்னாக இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிஸ்தவர், கொழும்புக்கும் வன்னிக்கும் டெல்லிக்கும் இடையே பறந்து திரிந்தவர் எரிக் சொல்ஹைம்.

சுதந்திர இலங்கையின் அரசியலில் 9/21 என்பது ஒரு அரசியல் சுனாமி என்றால் மிகையல்ல. ஆனால் இது எப்படி சாத்தியமானது ? என்பது, ஆறு சகாப்தங்களுக்கு மேலான ஒரு தவம்.

ஜேவிபி – ஜனத்தா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) அறுபதுக்களின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இடதுசாரித்துவம் கொண்ட அரசியல் இயக்கம். விவசாய பூமியான இலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளால் கொள்ளையிடப்பட்டு, சுறையாடப்பட்டு, தன்னிறைவை இழந்து, வறிய நாடாக்கப்பட்டு, 1948இல் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானிய காலனித்துவ வாதிகளுக்கு விசுவாசமான அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமேட்டுக்குடி சிங்கள – தமிழ் அதிகார வர்க்கத்திடம் கை மாற்றப்பட்டது. இலங்கையின் கிராமம்புற விவசாயிகள் பெரும் கஸ்டத்தை அனுபவித்த காலகட்டம் அது. வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை உலுக்கிய காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் தான் ஜேவிபி கருக்கொண்டது. இது கியூபா புரட்சிக்குப் பின்னான காலகட்டம். கியூபாப் புரட்சியால் ஈர்க்கப்பட்டவர்களில் ரோகனவிஜயவீரவும் ஒருவர். கியூபாப் புரட்சியில் பிடல் கஸ்ரோவோடு தோளோடு தோள் நின்று போராடியவர் சே குவெரா. ஜேவிபியின் தலைவர் ரோகன விஜயவீர பொலிவியாவில் 1967இல் சிஐஏ – அமெரிக்க புலனாய்வுப் பிரிவு – சென்ரல் இன்ரலிஜன் ஏஜென்சி யினால் படுகொலை செய்யப்பட்ட சேகுவராவின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அதனால் பிற்காலங்களில் இவ்வமைப்பு ‘சேகுவேரா’ என்றும் அறியப்பட்டிருந்தது.

1971 அன்று மார்ச் மாத முற்பகுதியில் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் நான் பிறந்திருந்த காலத்திலேயே அந்தப் புரட்சி வெடிக்கக் காத்திருந்தது. அனுராதபுரம் சிங்கள மக்களின் கலாச்சாரத் தலைநகரம். எமது குடும்பத்தின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் என்னுடைய அம்மப்பாவின் தந்தையின் தொழில்நிமித்தம் அன்றைய காலத்தில் எனது குடும்பமும் உறவுகளும் அனுராதபுரத்தில் வாழ்கின்றோம். எனது தந்தையார் ஈவிகே பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஒரு திராவிடன். அதனால் அவருக்கு ஜேவிபி மீதும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. ஆனால் ஒரு ஜேவிபி உறுப்பினராக ஆயதம் ஏந்த அவர் முன்செல்லவில்லை. ஆனால் அவர் ஜேவிபியை மனதார ஆதரித்தார். இந்தப் பின்னணியில் நான் பிறந்திருந்த அந்தச் சுழல், இலங்கை அரசைக் கைப்பற்றும் இராணுவத்திட்டம் ஒன்றுக்கு ஜேவிபி தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது.

‘சேகுவரா கலவரம்’ என்று பெரும்பாலும் அறியப்பட்ட ஜேவிபி இலங்கை அரசைக் கைப்பற்ற ஏப்ரல் 5, 1971இல் மேற்கொண்ட புரட்சிக்கு முன்னதாகவே அதன் தலைவர் ரோகன விஜயவீர உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இருந்தும் இலங்கையின் பல மாவட்டங்கிளிலும் இருந்தும் 100 வரையான பொலிஸ் நிலையங்கள் ஏப்ரல் 5 இரவு தாக்கப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மாறாக ஏப்ரல் 5 அதிகாலையிலேயே தவறான தகவலையடுத்து மொனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதால் ஏனைய பொலிஸ் நிலையங்கள் உசார் படுத்தப்பட்டது. ஒரு அதிர்ச்சியான தாக்குதலை தொடுக்க இருந்த ஜேவிபியால் அந்த அதிர்ச்சியைக் கொடுக்க முடியவில்லை. பல்வேறு களநிலைமைகள் காரணமாக ஒரு சில வாரங்களிலேயே புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பலர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அரச இயந்திரம் கொடூரமான கரங்கள் கொண்டு, ஜேவிபி இல் இருந்தவர்களை மட்டுமல்ல அவர்களுடைய குடும்பங்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் எனப் பல நூறு, ஆயிரம் பேரை கொன்றொழித்தது. அந்தக் கொடூரக் கொலைகளின் அடையாளங்களில் ஒன்றுதான் கத்தரகம (கதிர்காமம்) புதவருட அழகுராணி பிரேமாவதி மன்னம்பேரியின் படுகொலை. 22 வயதேயான இவ்விளம்பெண்இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணமாக தெருவால் இழுத்துவரப்பட்டு ஏப்ரல் 16, 1971 அன்று பல தடவை சுடப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டாள். யாழ் செம்மணியில் எரிக்கப்பட்ட கிருசாந்திக்கும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்கும் இவள் அக்காவாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறான பல சம்பவங்கள் தெற்கிலும் அதன் பின் வடக்கிலும் இடம்பெற்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள – தமிழ் ஆளும் குழமங்கள் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் தங்கள் வாக்கு வங்கிகளைக் காப்பாற்ற அதிகாரத்தை சுவைக்க ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை கக்கி அந்த இனவாதத்திற்கு நெய்யூற்றி வளர்த்து வந்தனர். தமிழரசுக் கட்சியுடைய உண்மையான பெயர் சமத்துவக் கட்சி. தமிழ் மக்களை ஏமாற்றவும் உசுப்பேத்தவும் வைத்த பெயர்தான் தமிழரசுக் கட்சி;. 1970 தேர்தலில் இடதுசாரிகளின் கை ஓங்குவதை அவதானித்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் 1976இல் ஒன்றாகி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி இடதுசாரிகளை தோற்கடிக்க போட்ட திட்டம் தான் நாட்டைப் பிரிக்கின்ற தமிழீழ விடுதலைக் கோரிக்கை – வட்டுக்கோட்டைத் தீர்மானம். அப்புகாமியும், பொன்னையாவும், சலீம்பாயும் தெருவில் வயிற்றுப்புழைப்புக்காகச் சண்டைபிடிக்க ஜேஆர் மாத்தையாவும், பொன்னம்பலம் மாத்தையாவும் ஹக்கீம் மாத்தையாவும் தொண்டமான் மாத்தையாவும் கூடி விருந்துண்டு மகிழ்ந்திருந்தனர். இந்த முரண்பாடு அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் தொடர்கிறது.

1971 வீழ்ச்சியிலிருந்து ஜேவிபி படிப்படியாக தனது அரசியல் பண்புகளை மாற்றி அரசியல் களம் புகந்தது. ரோகன விஜயவீர உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய நிலைக்கு அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி) தள்ளப்பட்டது. 1979இல் கொழும்பில் நடைபெற்ற மாநாகரசபைத் தேர்தலில் ஜேவிபி வெற்றி பெறாவிட்டாலும் ஏனைய இடதுசாரிகளைப் புறம்தள்ளி முன்னிலைக்கு வந்தது. 1981 இல் இடம்பெற் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஜேவிபி போட்டியிட்டு 13 ஆசனங்களைப் பெற்றது. 1982இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரோகண விஜயவீர போட்டியிட்டார். எனது தந்தையின் வாக்கும் அவருக்குச் சென்றது. 1982இல் அனுராதபுரத்திலிருந்த ‘கடதாய’ என்ற குறிச்சியிலிருந்த குவாட்டஸில் நான் எனது தந்தை சிறிய தந்தையின் வீட்டில் குடியிருந்தோம். வானொலியில் கேட்டு தேர்தல் முடிவுகளை கொப்பியில் எழுதிய ஞாபகங்கள் இன்னும் இருக்கின்றது. அப்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியாக ஜேவிபி பரிமாணம் பெற்றது.

ஜேவிபி யின் வளர்ச்சியை அவதானித்த ஐக்கிய தேசியக் கட்சியின் (யுஎன்பி) அன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன, ஒரு நரித்தந்திரத்தை மேற்கொண்டார். தனது வாக்குவங்கியைப் பலப்படுத்த இனவாதத்தைத் தூண்டிவிட்டார். ஜேஆர் ஜெயவர்த்தனா 1977இல் ஆட்சிக்கு வந்ததுமே இனக்கலவரம் ஒன்றைத் தூண்டிவிட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி காடையர்கள் 1983இல் மற்றுமொரு இனக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டனர். அதனைச் சாதுரியமாக ஜேபிவி இன் தலையில் போட்டார் ஜேஆர் ஜெயவர்த்தன, ஜேவிபியை அரசியலில் இருந்து தடைசெய்தார்.

இந்த இடைவெளியில் ஜேவிபி மீண்டும் தலைமறைவாகியது. 1987 இலங்கை – இந்திய ஓப்பந்தம் உருவாகி இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு இராணுவமாக இலங்கைக்குள் நுழைந்தது. ஏற்கனவே இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய விசேட கற்கைகளைக் கொண்டிருந்த ஜேவிபி மீண்டும் ஆயதங்களை ஏந்தியது. இதில் உள்ள பெரும் முரண்நகை என்னவென்றால்: ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதியாக வந்த ரணசிங்க பிரேமதாஸ இந்திய எதிர்ப்பை முன்வைத்து, “இந்திய இராணுவத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவேன்” என்ற கோஸத்துடன் ஜனாதிபதியானவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் யுத்தத்தை ஆரம்பித்திருந்தனர். ஜேவிபி யும் இந்தியாவுக்கு எதிராக ஆயதம் ஏந்தினர். ஜனாதிபதி பிரேமதாஸா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தன்னுடைய சகோதரன் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். ஆனால் …

ஜனாதிபதி பிரேமதாஸாவின் மென்போக்கை சாதகமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவுக்கு சார்பான நிலைப்பாட்டையே எப்போதும் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரியுஎல்எப்) தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரை யூலை 13, 1989 அன்று கொழும்பில் அவர்களுடைய இல்லத்தில் வைத்துப் படுகொலை செய்தனர். இப்படுகொலை நடைபெற்று 48 மணிநேரங்களுக்குள்ளாக யூலை 16, 1989 அன்று ஜேவிபி உடன் நெருக்கத்தைக் கொண்டிருந்த ஒரே தமிழ் அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரன், அவருடைய மெய்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அச்சம்பவம் நடைபெற்றது வெளி உலகத்திற்கு தெரியவருமுன்னரேயே தமிழகம் சென்று, இந்திய புலனாய்வுப் பிரிவான ரோவிடம் அடைக்கலம்பெற்றனர். அதற்கான ஏற்பாடுகளை ரோ முகவர் வெற்றிச்செல்வன் ஏற்படுத்தி இருந்தார். அப்போது நானும் அவர்களோடு இந்தியாவில் தங்கி இருந்தேன், வெளிநாடு வருவதற்காக. நவம்பர் 13, 1989இல் ஜேவிபி இன் தலைவர் ரோகண விஜயவீர இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தாலும் 1990க்களில் இந்திய இராணுவம் பெருத்த அவமானத்துடன் இந்தியாவுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. மே 21, 1991 இலங்கை – இந்திய ஓபந்தத்தை பலவந்தமாக அங்கீகரிக்க வற்புறுத்தியமைக்காகவும் இந்திய அமைதிப்படை தங்களைத் தாக்கியமைக்காகவும் முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். மே 1, 1993 இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாஸாவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். இவர்கள் எல்லோரையும் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் மே 18, 2009இல் இலங்கை அரசு படுகொலை செய்தது. இதன் பின்னணியில் இந்தியாவின் உளவுத்துறை செயற்பட்டதாக பலத்த குற்றச்சாட்டுகள் உண்டு. 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய தலைவர்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை. இவர்களில் ஜேஆர் ஜெயவர்த்தன மட்டுமே இயற்கை மரணத்தைத் தழுவினார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு முத்தரப்பு தோல்வி. அது தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சினைக்கான கேள்விக்கு எந்தத் தீர்வையும் தரவில்லை. அதனைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பமோ அல்லது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ இந்தியாவுக்கு இருக்கவில்லை. ஆனால் அதனை இலங்கை அரசை தனது நலன்சார்ந்து கட்டுப்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டாகவே இந்தியா தற்போதும் பயன்படுத்தி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 முதல் 1993 வரையான தொடர்ச்சியான ஆட்சியில் இலங்கையில் இரத்த ஆறு ஓடியது. அது தெற்கிலே ஆரம்பித்து வடக்கு வரை வற்றாது ஓடியது. ஜனாதிபதி பிரேமதாஸ ஜேவிபி உறுப்பினர்களைப் படுகொலை செய்து சடலங்களை களனி ஆற்றில் மிதக்கவிட்டார். 1989 காலப்பகுதியில் 60,000 சிங்கள ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகின்றது. 1971 ஜேவிபி புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஆக இருந்தது. அதே போல் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அனைத்து தரப்பையும் சேர்த்து 5,000 பேராகவே மதிப்பிடப்பட்டது. (இந்திய – இராணுவத்துடனான மோதல் புள்ளிவிபரங்கள் இதனுடன் இணைக்கப்படவில்லை.)

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி மீதான வெறுப்பால் முதல் தடவையாக சிங்கள – தமிழ் மக்கள் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசான சந்திரிகா குமாரதுங்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தனர். இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்த ஒரு தலைவராக அவர் அன்று காணப்பட்டார் என்றால் மிகையல்ல. இவர் ஜேவிபி மீதும் மென் போக்கைக்காட்டினார். 1995இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜேவிபி ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இதுவே ஜேவிபியின் முதல் பாராளுமன்ற ஆசனம். ஆனால் 2001இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி 16 ஆசனங்களை வென்றதோடு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கொள்கை முரண்பாடுகளால் இம்முன்னணி நீண்டாகாலம் நிலைக்கவில்லை. 2020இல் ஜேவிபி, என்பிபி – தேசிய மக்கள் சக்தி என்ற முன்னரங்க அமைப்பொன்றை நிறுவிப் போட்டியிட்டு மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

ஏழ தசாப்தங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் குழுமம் தங்களுடைய பொறுப்பற்ற ஆட்சிமுறைமையினால் நாட்டை மெது மெதுவாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக ஆளும் குழமங்களின் குடும்பங்களின் வளர்ச்சிக்கு இன, மத பேதமின்றி அப்பாவி மக்கள் பலிக்கடாவக்கப்பட்டனர். அவர்கள் நாளாந்த வாழ்வுக்கு கஸ்டத்தை அனுபவிக்க, சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையகத் தலைவர்கள் பொருளாதார சுபீட்சத்தை எட்டினர். இதனால் ஏற்பட்ட தார்மீகக் கோபம் ‘அறகலயா’ என்ற மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. ஆனால் இந்த மக்கள் எழுச்சியை மக்கள் தங்களுக்கு சார்பானதாக்க முதலே, மேற்குலகம் அந்த எழுச்சியை தனக்கு சாதகமாக்கியது. சீன சார்பான ராஜபக்ச குடும்ப ஆட்சியைக் கலைத்து மேற்குக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த விசுவாசமிக்க முகவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய நண்பருமான ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக்கப்பட்டார். மாறாக ‘அறகலயா’ போராட்டத்தை முன்னெடுத்தவர்களை விரட்டியடிக்க மேற்குலகம் முழு ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கொடுத்தது. மக்கள் மேலும் சினங்கொண்டனர். 2024 செப்ரம்பர் இலங்கை மக்களின் தீர்க்கமான நாளாக மாறியது. இந்த மாற்றத்தை தமிழ், முஸ்லீம், மலையகத் தலைமைகள் உணர்ந்தார்களோ இல்லையோ இந்தியா மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை முன்னாள் இந்திய இராணுவத்தளபதி ஹரிகரன் இலங்கை வானொலிக்கு செப்ரம்பர் 28 வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஜேவிபியின் வெற்றியைத் தடுப்பதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள வாக்குகள் ஜேவிபிக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய புலனாய்வுத்துறையின் செல்லப்பிள்ளையான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கொண்டுவந்த திட்டமே தமிழ் பொதுவேட்பாளர். கொழும்பில், யாழில் உள்ள இந்திய தூதரகத்தின் சட்டைப்பையில் இருக்கின்ற தமிழ் ஊடகங்கள், அதற்கு தமிழ்த் தேசிய மூலாம் பூசி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அரசியல் முகவரியற்ற பாக்கியசெல்வம் அரியநேந்திரனைக் களமிறக்கினர். அவரை வைத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜேவிபிக்கும் செல்லக்கூடிய வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு மடைவெட்டிவிடப்பட்டது. இதே பாணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு விழக்கூடிய வாக்குகளை தடுப்பதற்காக தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோரினர். அதற்காக மகிந்த ராஜபக்ச 200 கோடிகளை இலங்கை ரூபாய்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தனர். இது இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. 2006இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் என்ன நடந்தது என்பதை வரலாறு குறித்துக்கொண்டுள்ளது.

இத்தேர்தலில் வீழ்ந்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்கள், மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில்; ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவின் மகன் சஜித் பிரேமதாசவும் அவரைத் தொடர்ந்து சுயேட்சையாகப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்தின் அழைப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்து இருந்தனர். வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு மாவட்டத்திலும் தமிழ் பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரனால் முதலிடத்தைப் பெற முடியவில்லை. யாழ் மாவட்டத்தில் மட்டுமே அவரால் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. வன்னி மாவட்டத்தில் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் அவர் நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதுவே தமிழ் தேசியத்தின் காவலர் என்ற போர்வையில் களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு.

வாக்களிக்கப்பட்ட வீத்த்தை ஒப்பிடுகையிலும் சிங்களப் பகுதிகளுக்கு ஈடாக தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியத்தை முன்னெடுத்த கஜா அணியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் அறிவிப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை தமிழ் மக்கள் ஓரம் கட்டியுள்ளனர் என அனந்தி சசிதரன் குறுஞ்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியம் பேசி தமிழ் பொதுவேட்பாளரை அறிவித்தவர்களையும் தமிழ் மக்கள் தோற்கடித்து மூன்றாம் நான்காம் நிலைக்குத் தள்ளி மண் கவ்வச் செய்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த இலங்கைத் தேர்தல் முடிவுகளில் பின்பற்றப்பட்ட போக்கு இத்தேர்தல் முடிவிலும் வெளிப்பட்டு இருப்பது கண்கூடு. 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்காவும் அதன் பின் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இரு தேர்தலைத் தவிர ஏனைய தேர்தல்களில் தமிழ் மக்களின் தெரிவுக்கு மாறாகவே சிங்கள மக்களின் ஜனாதிபதித் தெரிவு அமைந்துள்ளது.

இதுவரை ஆட்சி செய்து வந்த ஆட்சிக்குழுமத்திற்கு எதிரான போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நகர்வை, மக்களை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் கவனிக்கத் தவறியிருந்தன. இளையோர் சமூகம் ஊழலற்ற ஒரு ஆட்சியை, மாற்றமொன்றுக்காக வாக்களித்துள்ளனர். சுதந்திர இலங்கையில் இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இத்தேர்தலில் இனவாதம் மதவாதம் பின் தள்ளப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய மக்கள் சக்தி. அதனால் அவர்கள் முதற்தடவையாக சிறுபான்மை மக்கள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கியை பல மடங்காக அதிகரித்துள்ளனர்.

இலங்கையின் தென்பகுதியைப் போல் வடக்கு, கிழக்கு மலையகத்திலும் மக்கள் அலையாகத் திரண்டு வந்து ஜேவிபியின் முன்னரங்க அமைப்பான என்பிபிக்கு வாக்களித்துள்ளனர். தென்பகுதியில் கடந்த காலங்களைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக மக்கள் ஜேவிபிக்கு வாக்குகளித்து இருந்தனர். ஆனால் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் மக்கள் பதினைந்து மடங்கிலும் அதிகமாக ஜேவிபிக்கு வாக்களித்துள்ளனர். இலங்கையில் 2019இல் நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் இத்தேர்தலில் என்பிபி க்கு பதின்மூன்று மடங்கு வாக்குகள் கிடைத்திருந்தது. ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த தேர்தலைக்காட்டிலும் 20 மடங்கு அதிகமாக மக்கள் என்பிபிக்கு வாக்களித்துள்ளனர். இலங்கையிலேயே யாழ் மாவட்டத்தில் தான் என்பிபி கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் கூடுதல் மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. 2019 இல் என்பிபி பெற்ற வாக்குகள் 1,375. இத்தேர்தலில் என்பிபி பெற்ற வாக்குகள் 27,086 வாக்குகள். அது தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜேவிபி மிதான அச்சம் நீங்கி தமிழ் மக்கள் ஜேவிபியை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றது. இந்த வாக்கு நகர்வு நவம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதுவரை வடக்குக் கிழக்கில் ஒரு போதும் பாராளுமன்ற ஆசனத்தைப் பெறாத ஜேவிபி நவம்பர் 2024 பாராளுமன்றத் தேர்தலில் மூன்று முதல் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம். இப்பாராளுமன்றத் தேர்தல் போலித் தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவதாக அமையும்.

தமிழ் முஸ்லீம் கட்சிகள், தேசியம் பேசிய தமிழ் கட்சிகளும் கூட மக்களைப் புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த 2019 தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக சஜித் பிரேமதாச கணிசமான வாக்குகளைப் பெற்றதால் தங்களுடைய வழமையான புளித்துப்போன போர்மிளாவின் அடிப்படையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்தனர். தற்போது மண் கவ்வியுள்ளனர். இவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை இழந்துள்ளனர். தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் மத்தியிலிருந்து அரசியல் புத்துணர்ச்சி கொண்ட இளைய தலைமுறை அரசியலுக்கு வந்து காலாவதியாகிப் போன இப்போதுள்ள தலைமைகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது மிக அவசியம்.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மாற்றத்தை நோக்கி நாட்டை நகர்த்த தயாராகி விட்டனர். ஏனைய சமூகங்களும் அந்தப் பாதையில் முன்னேறிச் செல்வதை இத்தேர்தல் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போவதில்லை. மாற்றங்கள் அவ்வளவு இலகுவில் வந்துவிடப் போவதுமில்லை. தேசிய மக்கள் சக்தியின் அடுத்துவரும் காலங்கள் கடுமையானதாகவும் சவாலானதாகவும் அமையும்.

நவம்பரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் என்பிபிக்கு வழங்கிய ஆணையை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் (113 ஆசனங்கள்) பெற்றுக்கொள்ளும் வகையில் தங்கள் வாக்குகளை வழங்க வேண்டும். என்பிபி பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்கும். ஆனால் அவர்களால் அறுதிப் பெரும்பான்மையை அதாவது மூன்றில் இரண்டு (150 ஆசனங்கள்)பெரும்பான்மையை தக்க வைக்க முடியும் என்பது இலங்கைத் தேர்தல் முறையில் மிகக் கடினமானது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் ஆணையைப் பெற்றாலேயே ஜேவிபி யால் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு வரும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னாக ஜேவிபி தன்னுடைய பிரத்தியேக ஆட்சி முறையை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். பொருளாதாரத்தில் குறிப்பாக பொருட்களின் விலையில் வீழ்ச்சியயைக் காட்ட வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கும் மற்றும் மேற்குலகுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் பணியாமலும் எகிறாமலும் உறவைத் தக்கவைத்து காய்களை நகர்த்த வேண்டும். இவற்றைச் சாத்தியமாக்குவதற்கு மக்கள் ஜேவிபியின் பின்னால் நின்றால் மட்டுமே சாத்தியம். என்பிபியைப் பொறுத்தவரை ஜனாதிபதிப் பதவியையும் பாராளுமன்றத்தையும் கைப்பற்றுவது இலகு. ஆனால் அவற்றைத் தக்க வைக்க மக்களுடைய பரந்துபட்ட எதிர்பார்ப்புக்கு தீர்வுகளை வழங்குவது மிகச்சிக்கலானதும் கடினமானதும் ஆகும். இலங்கையில் அடிப்படை அரசியல், பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த என்பிபிக்கு இரண்டு பாராளுமன்றக் காலம் அவசியமானது. அதிகாரத்தின் சுவை என்பிபியை மாற்றுகின்றதா இல்லை என்பிபி நாட்டின் அரசியல் பொருளாதார கட்டமைப்பை மாற்றுவார்களா என்பதை அடுத்து வரும் மாதங்கள் வெளிப்படுத்தும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *