முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, உகண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற, சட்டவிரோதமாக பெறப்பட்ட உழைக்கப்பட்ட பணத்தை மீட்கவேண்டிய பரந்துபட்ட சூழமைவின் அடிப்படையிலேயே உகண்டாவில் உள்ள களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன்.
நான் தெரிவித்தமைக்காக நான் முழுப்பொறுப்பையும் ஏற்கின்றேன். நான் தெரிவித்த சில கருத்துக்களிற்காக எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். எனக்கு உகாண்டா குமாரி மெனிக்கே என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் ஆற்றிய உரைகளின் போது சட்டமொழுங்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசநாயக்கவினால் அதனையே செய்ய முடியும் என்பதையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.