ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம் !

ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரேன் மீதான போருக்காக ரஷ்யாவிற்கு ஏவுகணைகளை ஈரான் வழங்கியமைக்காக இந்த தடை உத்தரவை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இதில் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஈரான் ஏர், அத்துடன் விமான நிறுவனங்களான சாஹா ஏர்லைன்ஸ் மற்றும் மஹான் ஏர் ஆகியவை அடங்கும்.

 

அதேநேரம், தடைகளை எதிர்கொண்ட நபர்களில் ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் செயத் ஹம்சே கலந்தாரியும் அடங்குவர்.

 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பத்தை ரஷ்யாவிற்கு உக்ரேனுக்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பியதாக குற்றம் சாட்டியது.

 

உக்ரேனுக்கு எதிரான தனது போருக்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய பின்னர், தெஹ்ரான் மீதான பொருளாதாரத் தடைகளை பரிசீலிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் கூறியது.

 

குற்றச்சாட்டுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது, மொஸ்கோ அதற்கு மறுப்பு வெளியிடவில்லை. மாறாக தெஹ்ரானுடன் வளர்ந்து வரும் உறவு குறித்த கருத்தினை வெளியிட்டிருந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்கியுள்ளது.

 

எனினும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விநியோகம் உக்ரேன் – ரஷ்ய மோதலில் ஈரானின் ஆழ்ந்த ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *