தமிழர்கள் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் – வடக்கு கிழக்கில் விரைவில் அதிக தமிழ் பொலிஸார் – உறுதியளித்த அனுர அரசு !

தமிழர்கள் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் – வடக்கு கிழக்கில் விரைவில் அதிக தமிழ் பொலிஸார் – உறுதியளித்த அனுர அரசு !

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு மையத்தை யாழ்ப்பாணத்தில்  திறந்து வைக்கும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது உங்களுக்கு (பொலிஸாருக்கு) ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதேவேளை வடக்கு மக்கள் எமக்கு பெற்றுத் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் . கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவையை பெற்றுக் கொடுப்போம் . அதேபோன்று சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய ஒழுக்கமான சமூகத்தையும் உருவாக்க நாம் முன்னிற்போமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சர் ஆனந்த விஜயபால அநுராதபுரம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் ஆட்சியேற்று மிகக்குறுகிய கால இடைவெளியில் தமிழ் மக்களின் நம்பிக்கையை அதிகமாக பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. முன்னைய அரசாங்கங்கள் தங்களது தென்னிலங்கை வாக்கு வங்கிக்காக தமிழர்களின் அடிப்படை நினைவேந்தல் உரிமையை கூட மறுத்துவந்தன. எனினும் என்.பி.பி அரசாங்கம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளை முழுமையாக கடந்த ஆண்டு கார்த்திகை 27ஆம் திகதி வழங்கியிருந்தது. மேலும் இராணுவ தடைகள் பல இடங்களில் அகற்றப்பட்டு வருவதுடன் இராணுவம் பொலிஸாரால் அங்கங்கே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டு வருவது மக்களிடையே தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தேசம் நேர்காணலில் பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துவருகின்றனர். இந்த  நிலையில் மிக நீண்டகாலமாக தமிழர் பகுதிகளில் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் வேண்டும் என்ற வேண்டுகோள் காணப்பட்ட நிலையில் தமிழ்தேசிய கட்சிகள் ஆதரவளித்த நல்லாட்சி அரசாங்கம் தொடங்கி முன்னைய அரசாங்கங்கள் இது தொடர்பில் மௌனம் சாதித்து வந்த நிலையில் தமிழர் பகுதிகளில் தமிழ்பொலிஸ் அதிகாரிகள் தவை என்ற நிலைப்பாட்டை தாம் உணர்ந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமையானது அக்கபூர்வமான அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *