குளத்தின் நடுவே ஒன்றல்ல இரு தடவைகள் மைதானம் கட்ட நிதி ஒதுக்கிய சாணக்கியன் – மோசடி !
மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.
அந்த நிதி அவர்களது ஆதரவாளர்கள் மூலம் பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது
இவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்வதால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்