பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா, ஹிஸ்புல்லா போன்ற குறைவிருத்தி அரசியல் வாதிகள் தமிழ் – முஸ்லீம் உறவை சிதைக்கின்றனர் !
பாராளுமன்ற உறுப்பினர்கள் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த போதும் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்கின்றனர் எனக் குற்றம்சாட்டுகின்றார் ஓய்வுபெற்ற சட்டத்தரணியும் அரசியல் செயற்பாட்டாளருமான மொகமட் நிஸ்தார். இவர் தேசம்நெற்க்கு முஸ்லீம் விவாவகம் விவாகரத்து பற்றிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார். ஹிஸ்புல்லா அர்ச்சுனாவை பைத்தியம் என்றும் அவருக்கு வைத்தியம் செய்யப்பட வேண்டும் என்று சொல்வதும் அர்ச்சுனா ஹிஸ்-ஃபுல் என்றும் முளையில் எதுவுமில்லை என்று சொல்வதும் ஒன்பது வயதுப் பெண் பிள்ளையோடு உடலுறவுக்கு அனுமதிப்பவன் படித்தவனா நான் படித்தவனா என்றெல்லாம் பேசவது நாகரீகமாகத் தெரியவில்லை என்றார் மொகமட் நிஸ்தார்.
இலங்கையில் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் என மூன்று தனிநபர் சட்டங்கள் உள்ளன எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் விவாவகம் – விவாகரத்து தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சலீம் மஸ்ரூப் அவர்கள் இந்த முஸ்லீம் சட்டத்தை திருத்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளார் அதே போல் தற்போது ரணிலின் கட்சியில் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்றுள்ள பைசர் முஸ்தபாவினுடைய தந்தையும் ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தார். இதில் எந்த பரிந்துரையை தெரிவு செய்வதென்பதில் முஸ்லீம் சமூகம் ஒரு முடிவுக்கு வரமுடியாதுள்ளனர் என்கிறார் மொகமட் நிஸ்தார்.
அன்றைய பாராளுமன்ற விவாதத்தில் அர்ச்சுனா பேசியது தவறல்ல எனத் தெரிவிக்கும் மொகமட் நிஸ்தார் அவர் விடயத்தை புரியாமல் தெரியாமல் பேசியதே தவறு என்றார். மேலும் முஸ்லீம் சமூகம் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையை இதுவரை நடைமுறைக்கு கொண்டு வராதது தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.