இந்திய அரசு தெரிந்து கொண்டே அனுமதிக்கிறது குற்றம் சாட்டுகிறார் அமைச்சர் சந்திரசேகர் !
கேரள, கர்நாடக கடற்பரப்புக்குள் நுழையாத தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே நமது எல்லைக்குள் நுழைந்து வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள் என்கிறார் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
இந்தியாவுக்கு இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். ஆனாலும் கூட இந்த சட்ட விரோத மீன்பிடி தொடர்கிறது நம் கடல் வளம் அழிக்கப்படுகிறது என பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக மீன் பிடிப்பதால் இலங்கையின் கடல் வளங்கள் நாசமாக்குகின்றது. இந்த விடயம் இந்திய அரசின் மறைமுக சம்மதத்துடன் நடப்பதாகவே கருத முடியும் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர். இவ் விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி அநுர குமாரவோடு இன்னும் ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை.
தமிழக மீனவர்கள் அருகிலுள்ள கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளின் கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடிப்பதில்லை. திட்டமிட்ட வகையில் நமது நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்து நமது வளத்தை அழிக்கிறார்கள். அத்துடன் நம்மை தொப்புள் கொடி உறவுகள் என்று வேறு சொல்கிறார்கள் என ஆதங்கப்பட்டார்.
எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அத்துமீறினால் நமது சட்ட நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும் என அமைச்சர் தமிழக மீனவர்களுக்கு வேண்டுகோளாக எச்சரித்தார்.