இந்துசமுத்திரத்தை பாலைவனமாக்கும் தமிழக மீனவர்கள் – கச்சதீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களினதும் தமிழக மீனவர்களினதும் பொருளாதாரத்தை தமிழக மீனவர்கள் அழிக்கிறார்கள் என்கிறார், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் சந்திரசேகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை. இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது.
எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என்றார் அமைச்சர் இராமலிங்கம்.