சுகாதாரத் துறையில் இரண்டு வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ‘மெரிகெயார்ஸ்’ எனும் அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனம் 100 கோடி ரூபா நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்நிறுவனத்தின் நிதியுதவியுடன் 35 மில்லியன் ரூபா செலவில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் பயிற்சி நிலையம் நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதுபோன்ற நிலையங்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கண்டி, அனுராதபுரம் வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் இதற்கெனவே மேற்படி நிறுவனம் 100 கோடி ரூபா நிதியை வழங்கவுள்ளது.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலை வளாக சிறுவர் பயிற்சி நிலையத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட மேற்படி அமெக்க நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி லியா ஹில்மி இதற்கான உறுதிமொழி வழங்கியுள்ளார். மெரிகெயார்ஸ் நிறுவனம் கடந்த சுனாமி பேரழிவின் போது இலங்கைக்குப் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கியதுடன் அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்து வருகிறது.
எல்பிடிய பெரியாஸ்பத்திரியின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்நிறுவனம் 450 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது. இதன் மூலம் ஆஸ்பத்திரி கட்டடங்கள் பல நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றியதுடன் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.