தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன்

tamil-elam-flag.gifவரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் -எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட – விரிவான – ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்

21 ஜூலை 2009

உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுவின் அறிவிப்பு

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் பேசும் மக்களே,

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்படிந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத – கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத – மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் – தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை – ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் – வரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள் ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.

எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட – நீண்ட – விரிவான – ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு முடிவுக்கு அமைய – தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.

எமது போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

எமது பெருந் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ்வண்ணம்,
நிறைவேற்றுச் செயற்குழு சார்பாக,
திரு.சுரேஸ் (அமுதன்), திரு.ராம்.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • Kumaran
    Kumaran

    இப்ப தான் மக்கள் வெளிநாடுகளில் ஓரளவு பயம் இல்லாது கருத்துக்களை வெளிப்படையாக முன் வைக்கிறார்கள் அத்துடன் வன்னி மக்கள் பாசிசப் புலிகளால் பட்ட கஷ்டங்களையும் ஒரு போதும் மறக்க மாட்டர்கள்.

    பிரபாகரன் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் என்பது ஆயுத முனையில் தமிழ் மக்கள் மேல் தினிக்கபட்டதொன்று.

    மனித நேயத்தையும் சமதானத்தியும் விரும்பும் எவரும் புலிகள் தொடர்ந்தும் ஏமாற்ற விட மாட்டர்கள்

    Reply
  • BC
    BC

    அன்புக்குரிய புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கண்ணை மூடிக் கொண்டு இலங்கை தமிழர்கள் அழிவுக்கும் இவர்களின் வளமான வாழ்வுக்கும் பணம் தரும்படி வேண்டப்படுகிறார்கள்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    ஐயோ! புறப்பட்டுட்டாங்கடா புறப்பட்டுட்டாங்க. பிரபாகரனை அமெரிக்காவை அனுப்புகிறோம் என்று கோவணத்தோடை விட்டவங்கள். வீடு வீடாய் வரப்போகிறாங்கடா. இனி உங்களுக்கும் கோவணம்தான். கவனமாக இருங்கோ.

    Reply
  • மாயா
    மாயா

    மகிந்த சிறுபான்மை இனம் என்ற ஒரு இனமே இனி இல்லை என்று நிலையில் நாட்டின் மாற்றததைக் கொண்டு வரப் போவதாக மட்டும்தான் சொன்னார். அதை சரியா செய்ய புலிகள் வெளிக்கிட்டுட்டாங்கள். முடிந்தவங்க நாட்டை விட்டு வெளியேறுங்கள். முடியாதவர்கள் ஆகக் குறைந்தது சிங்களவர்களாகவாவது மாறுங்கள். இலகுவானது முஸ்லீம்களாக மாறுவது. வேறு எந்த வழியையும் காட்ட தெரியல்லை சாமி. இனி இலங்கையிலுள்ள தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. இதுதான் உண்மை.

    என் வீட்டுக்கு வந்தால் போலீசுக்குதான் முதல் அழைப்பு. இல்லையென்றால் இங்கையும் வாழ விடமாட்டாங்கள். வந்த நாட்டிலாவது நிம்மதியா இருக்க வேண்டும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலம்பெயர்ந்த தமிழ்மக்களால் தான் ஈழம்வாழ் தமிழ்இனம் அழியவேண்டுமென்ற விதியிருந்தால் அதுயாரால்தான் தடுத்து நிறுத்த முடியும்?.

    Reply
  • தமிழ் தலிபான்கள்
    தமிழ் தலிபான்கள்

    இது ஒரு போலி அறிக்கை. புலிகளால் 2009 வரை ஓரங்கட்டபட்டு ஒதுக்கபட்டவர்கள் இப்ப தாங்கள்தான் புலிகள் என்றால் ஆர் ஏற்கமுடியும்.

    Reply
  • tamil boy
    tamil boy

    தமிழ் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள் என்னத்தைச் செய்தால் என்ன. யாருக்குக் கவலை.

    Reply
  • sekaran
    sekaran

    ‘அவரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.’ இவரும் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.வித்தியாசம் அவ்வளவே. நாடு கடந்த தமிழீழம் என்கிறார்களே எதற்கு? நாக்கு வழிக்கவா?

    Reply
  • kumarathasan
    kumarathasan

    please dont mind theese boys, who are they? they cant come knock our doors. we cant be fool any more. we can be better with mahinda than theese boys. come on peoble get rid of theese people. think reality than fantacy.

    Reply
  • msri
    msri

    இவைகள் வெறும் “அசரீதி” வார்த்தைகள்! இடைக்கிடை கேட்டுக்கொண்டே இருக்கும்! புலி ரசிகர்களுக்கு வேதமந்திரமாக உச்சாடனம் செய்ய உதவும்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எலிகளாகிவிட்ட புலிகள் பூனை போல் சீறிப் பார்க்கின்றார்கள், ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றலாமென்ற சிந்தனையில். தலைமச் செயலகம் எங்கு என்று குறிப்பிடப் படாததால் சிலவேளை கீழ்ப்பாக்கத்திலோ அல்லது அங்கொடையிலோ இருந்து தான் இயங்குகின்றார்களோ தெரியவில்லை??

    Reply
  • sarana
    sarana

    புலிகள் பற்றிய பற்றின் ஈ(ன)ரம் நெஞ்சில் காயாத இணையத் தளங்கள் கூட உலா வரவும். உடனடியாக முகாம்களைக் கலைத்துவிடக் கோரவும். அதன் முலம் அகதிமுகாம்களில் மக்களோடு மக்களாய் ஒளிந்துள்ள புலிகளை பிடிபடாமல் தப்பிக்க உதவும் முயற்சியிலீடுபடுவதும் என்று இந்தக் கூத்துகட்டிகள் மேல்மாடி அற்றவர்கள் இருக்கும் வரை செ.பத்மநாதன் போல பலர் உருவாகலாம். எது எப்படியோ மக்கள் சிந்திக்கும் காலத்தை சற்று பின்னிழுக்க உதவலாமே தவிரமுழுமையாகத் தடுக்க எந்த கொம்பனுக்கும் வலுப் போதாது.மக்கள் சிந்தித்த போதெல்லாம் பிற்போக்குத் தலமை அழிக்கப்பட முதலில் தீக்கிரையானவர்கள் பி.போ. ஊடக மந்தைகள் என்பதாவது அறிந்திருப்பீர்கள். இதில் அதிகம் யோசிப்பதற்கு எதுவுமில்லை மகிந்த வலையில் அதிவிரைவில்! இவருக்கும் மூளைச் சோதனையோ?

    Reply
  • tamil boy
    tamil boy

    இன்றும் அதே கொடியுடன் நீங்கள் தலைவர் என வெளிவந்துள்ளீர்கள் கடந்தகாலங்களில் மாற்று இயக்கத்ததவர்கள் மீதும் மக்கள் மீதும் நடைபெற்ற பாசிசக் கொலைகளக்கு யார் பொறுப்பு இப்போது அதே கொடியுடனும் அதே பெயருடனும் வெளிவந்த நீரோ பொறுப்பாளியபாகுகின்றீர் பதில் தரமுடியுமா? பத்மநாதன் அல்லது கடந்த காலங்கள் போல்த்தான் முடியுமா?

    Reply
  • மணி
    மணி

    முல்லைமண் வலைப்பூவுக்குள் மணியடிச்சுக் கொண்டு வாற மாண்புமிகு மணி அவர்களுக்கு,
    (இவருக்கு கனக்க புனைபெயருகள்)

    புலிகளால் துரத்தப்பட்ட , ஐரோப்பாவில் வந்து ஒளித்திருந்து புலிகளின் புலனாய்வுத் தலைவன் தானென்று கனவு கண்டு , இணையங்களை இயக்குவோருக்கெல்லாம் சுட்டுத் தள்ளுவேன். 5லட்சம் யூரோக்களுக்கான ஆயுதம் தன்னிடம் உள்ளதாக மெயில் போட்டு வெருட்டிக் கொண்டிருக்கும் மணி துரோகத்துக்கும் நம்பிக்கைக்கும் இப்போதாவது வித்தியாசம் புரியும் என நம்புகிறேன்.

    இந்த மொட்டைக்கடிதம் எழுதுவது ஆக்களை மிரட்டிறது எல்லாத்தையும் உங்களுக்கு மிரளும் சாதுக்களுக்கு எழுதுங்கோ.

    உம்மையெல்லாம் புலிகள் புலானய்வுப்பொறுப்பில் வைத்துத்தான் புலிகள் அழிந்தார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

    அவனவன் போய் சாக பின்னாலை நின்று காட்டிக் குடுத்து புலனாய்வு செய்த உமக்கெல்லாம் புதிய புறநிலையரசில் புலனாய்வுப்பதவி ? புறநிலையரசும் இனி கவிண்டுவிழும் போலதானிருக்கு.

    Reply
  • thurai
    thurai

    வன்னிமக்களை இராணுவத்தின் குண்டு மழையில் சாகவிட்டவர்கள். புலத்தில் பண மழையில் தொடர்ந்தும் வாழ விரும்புகின்றார்கள்.

    தலைவர்களிற்கு பாதுகாப்பிற்கு பங்கர்.
    போக்குவர்த்திற்கு கவசவாகனம்.
    கடல் பயண்த்திற்கு நீர்மூழ்கிக்கப்பல்.

    இதுவே புலிகள் காட்டிய தமிழீழதாகம்.
    புலத்தில் வாழும் ஈழ்த்தமிழ் அறிவுகளே.
    கண்ணை மூடிக்கொண்டு கேட்பதைக் கொடுங்கள்.தமிழீழம்
    காட்டத் தயாராகின்றார்கள் புதிய புலிகள்.
    காணத் தயாராகுங்கள்.

    துரை

    Reply
  • rajai
    rajai

    ஐயோ! கிளம்பிடாங்கயா… கிளம்பிடாங்கயா..

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இன்னமும் புலிகள் புதைத்த புதையல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. புலிகளின் புலனாய்வு துறை கொடுக்கும் தகவல்களை வைத்து படையினர் தங்கம் : ஐவரம் : ஆயுதங்கள் என்று எடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். புலத்து புலிப் புண்ணாக்குகள் கோப்பை கழுவி, கக்கூசு கழுவி, புலிகளுக்கு அள்ளிக் கொடுத்ததெல்லாத்தையும் தோண்டித் தோண்டி எடுக்கிறாங்கள்.

    புலத்து புலி வால்களுக்கு சொகுசு வாழ்கையையும், தாயகத்தில் மக்களை நிர்க்கதியாக்கியும் வாழ்ந்தோர் போய்ச் சேர்ந்திட்டார்கள். இன்னமும் கறக்க நாவுறூது கறந்த கூட்டத்துக்கு. மந்தைகள் ரெடியாகாலாம். அள்ளிக் கொடுங்கோ. அங்குள்ள மக்கள் சாகட்டும்.

    Reply
  • tamil boy
    tamil boy

    புலிகள் எப்படி புரட்சிகர அமைப்பு போல் தம்மை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவதானிக்க வேண்டும்; பிரபாகரனோ கேபி யோ யாரால் தெரிவு செய்யப்பட்டார்கள் என்ன ஜனநாயக நடைமுறை பின்பற்றப்பட்டது. இனிமேல் புலிகள் அமைப்பு சர்வதேசத்தின் மிகவும் கவனமாக அவதானிக்கப்படும். ஏதோ ஒரு ஏகாதிபத்தியம் பிரபாகரனை பாவித்து விட்டு கொல்லவும் விட்டது போல் கேபியையும் பாவிக்க திட்டம் உருவாகியுள்ளது அவதானிக்கலாம்.

    தமிழ் மக்கள் புலம் பெயர்மக்களாலே அழிக்கப்படுவது நன்றாகவே தெரிகிறது.

    Reply