எலிக்காய்ச்சல் தடுப்பு பக்ரீறியாவை வழங்க கியூபா முன்வருகை

இலங்கையில் டெங்கு நோய் தடுப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை வழங்க உடன்பட்டிருப்பது போல், எலிக் காய்ச்சல் தடுப்புக்கான பக்ரீறியா ஒன்றை வழங்கவும் கியூபா முன்வந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கையிலுள்ள கியூபா தூதுவர் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே கியூபா இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்தார்.

இதேநேரம், இவ்வருட ஆரம்பம் தொடக்கம் இதுவரை எலிக் காய்ச்சலினால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 1,500 பேர் வரை அக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களென இனங் காணப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், டெங்கு ஒழிப்புக்கு இலங்கையில் பி.ரி.ஐ. பக்ரீறியாக்களை பயன்படுத்துவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கென அண்மையில் இலங்கை வந்த கியூபா நாட்டு நிபுணர்கள் இருவரும் தற்போது அம்பாந்தோட்டையில் தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், நாளை புதன்கிழமை முதல் அவர்கள் கண்டி செல்லவிருப்பதாகவும் வன்னிநாயக்க குறிப்பிட்டார்.

நாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படுகின்ற போதிலும், முதற்கட்டமாக அம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டே பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், பரிசோதனைகளின் இறுதியில் கியூப நாட்டு நிபுணர்களால் சுகாதார அமைச்சுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரமே இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.ஐ. பக்ரீறியாவை பயன்படுத்துவது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று கூறிய வன்னிநாயக்க, ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கினால் 208 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *