பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ராவிட் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ராகுல் டிராவிட். இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளார். காயம் காரணமாக முன்னணி வீரர் செவாக், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மாத ஓய்வுக்குப் பின், இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் செப். 8 ஆம் திகதி இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்குப் பின் செப். 22 ஆம் திகதி தென் ஆப்ரிக்காவில் ஆரம்பிக்க உள்ள சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி, நேற்று தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சென்னையில் தேர்வு செய்யப் பட்டது. இந்திய கேப்டன் தோனி மற்றும் பலர் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அணியின் அதிரடி துவக்க வீரர் செவாக், தோள்பட்டை காயத்தால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது இதற்கு சிகிச்சை பெற்று வரும் செவாக், முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். செவாக் இல்லாத நிலையில், இந்திய அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் நோக்கில், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார் டிராவிட். இவர் கடைசியாக கடந்த 2007 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தார். அதற்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த டிராவிட், தற்போது மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் காலடி வைக்க உள்ளார்.