ஒரு இலட்சத்து 96 ஆயிரம் (பல்வேறு வகையான) ரவைகள், 110 கிலோ எடையுள்ள 32 கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இங்கிருந்து குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 70 கிலோ எடையுள்ள சைக்கிள் குண்டுகள் உட்பட பல்வேறு வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல்களின் போது 39 மி. மீ. ரவைகள் – 135000, 0.22 மி. மீ. ரவைகள் – 4600, 1.7 பிஸ்டல் ரவைகள் – 55815, தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் ஆயிரக் கணக்கான கிரனைட் லோஞ்சர்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
அம்பலவான்பொக்கனை, சுகந்திரபுரம், புதுக்குடியிருப்பு, சர்வார் தோட்டம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல்களின் போது பல்வேறு கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 50, இரசாயன போத்தல்கள் – 25, 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் – 40, 81 மி. மீ. மோட்டார் குண்டுகள் – 40, கைக்குண்டுகள் – 50, பெருந்தொகையான வெடிமருந்துகள், திசைகாட்டி மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.