உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் தவறி விட்டனவா? – புன்னியாமீன் –

un.jpgமுதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919 ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம்திகதி  உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.

ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனைவிட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலகமகாயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே 2ம் உலக மகாயுத்தமாகும்.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2ம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவுசெய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்த அமைப்பு 1 ஜனவரி 1942 முதல் போர்க்கால கூட்டணியாக செயற்பட்டது.

இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா,  சீனா,  பிரித்தானியா,  ரஸ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனிநிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.

இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 ஒக்டோபர் 24ம் திகதி இச்சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திடப்பட்ட பின்பே அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960இல் 100 நாடுகளும், 1980 ஆம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்த இவ்வமைப்பில்  2009 ஆண்டு தரவுகளின் படி தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளாக அரபு, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எசுப்பானிய மொழி என்பன காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவைகளே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். பொதுச் சபை (General Assabbly),
பாதுகாப்புச் சபை (Security Council),
பொருளாதார, சமூக சபை (Socio Economic Council),
நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council),
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice),
செயலகம் (The Secretariat)

பொதுச்சபை

192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64-வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விடயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியுயேர்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும்,  எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.

இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் அவையாவன: அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தர்மகர்த்தா, நீதி, நிர்வாகம், சிறப்பு அரசியல் குழு என்பனவாகும். பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச்சபையே தெரிவு செய்யும்.

பாதுகாப்புச்சபை

இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15 ஆகும். நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தெரிவு செய்யும். பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்துவதற்கும் யப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரம் இந்தியாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறமுயன்று வருகிறது.

பாதுகாப்புச்சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் ‘வீட்டோ” எனப்படும். இந்த ‘வீட்டோ” அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதே நேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஸ்யா, சீனாவிடம் இல்லாவிடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்து விட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்

ஐ.நா.வின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல், இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்

இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக்கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப்படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.  

பொருளாதார சமூக சபை அங்கத்துவ நாடுகள் 54 ஐக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயேர்க்கிலும்,  ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும்)

இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு, புள்ளிவிபரக்குழு, சனத்தொகைக் குழு,  சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு, பெண்கள் நல பாதுகாப்புக் குழு மேலும் ஐரோப்பிய ஆசிய,  லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கைப் பொறுப்புச்சபை

சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கின்றது.

சர்வதேச நீதிமன்றம்

இது ஹெய்க் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்)

செயலகம்

ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் ‘பன்-கீ மூன்” ஆவார்.
செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும்ää பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.

சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டன. எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது.
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளமை. 1967 ஆம் ஆண்டு ஐ.நா வின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, – 1968 ஆம் ஆண்டில் சோவியத் – செக்லோஸ்லவியா பிரச்சினை, 1974 ஆம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991 ஆம்ஆண்டு அமெரிக்க ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க – ஈராக், அமெரிக்க – ஆப்கான் யுத்தம்…   இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பேணவில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.

பிரச்சினை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. வல்லரசுகள் ஐ.நா.சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல் அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐ.நா. சபை செயற்பாடு; சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா. சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரித்தானியா 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவியத் ரஸ்யா ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரித்தானியாவின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம்,  பொருளாதாரச் சுரண்டல், இராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர மறை முகமாக ஐ.நா சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா? இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான கருமங்களை இது ஆற்றிவருவதை எம்மால் மறுக்கமுடியாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    மதிப்புக்குரிய புன்னியமீன் அவர்கள் பல பதிவுகளை இத்தளத்தில் பதியவிட்டிருக்கிறார். முக்கியமான பதிவாகவும் ஒவ்வொருவரும் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகவுமே இதை பார்க்கிறேன். அந்த வகையில் திரு புன்னியமீன் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

    சுருக்கமாக பதில் சொல்வதானால் கட்டுரையிலேயே விடையுள்ளது.//சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலகமாகயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே இரண்டாம் உலகமாகயுத்தம்.//அப்படியென்றால் சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் இரண்டாவது மூன்றாவதாக மாறிவிடுமல்லவா? அப்படியான நிலையிலேயே இன்று உலகமக்கள் இருக்கிறார்கள்.

    உலகத்தை பங்குபோடுகிற சந்தைகளை தங்களுக்கு பிரித்தெடுகிற போட்டிகளாகவே இந்த இரண்டுமாக யுத்தங்களையும் காணவேண்டியாகவுள்ளது. வல்லரசுகளின் போட்டிகளின் விளைவே இது. இதில் சோவியத்யூனியனையும் சீனாவையும் இதில் இணைக்க முடியாது. அவர்கள் எந்தநாட்டையும் தம்காலடியில் பணியவைக்க வேண்டுமென்று போராடியதில்லை.பல தவறுகள் இருந்தாலும் இவர்கள் போராட்டம் நியாமானதே!

    ஒரு அறிக்கை இப்படி சொல்லுகிறது.அமெரிக்காவிடம் இருக்கும் பணப்பலமும் ஆயுதப்பலமும் அதனை காட்டுமிராண்டித்தனத்திற்கே இட்டுச்செல்லும். ஐரோப்பாவைப் பொறுத்தவரை கிட்லர் போலந்துக்கள் அத்துமீறி நுழைந்து படிப்படியாக முழுஐரோப்பாவையும் தன்காலடியில் கொண்டுவர முனைந்தான் இதில்லிருந்து தான் இ.யுத்தம் ஆரம்பமாகிறது. இன்று ஜேர்மனியும் அதன் பங்குதாரர்களும் பணவலிமையாலும் நிர்பந்தத்தாலும் இருபத்தைது நாடுகளை தம்கைபிடியில் வைத்திருக்கிறார்கள். ஐரோப்பாவும் அமெரிக்காவும் எந்தவித போட்டா பேட்டியில்லாமல் நிரந்தரமாக சமாதானத்துடன் நடந்தது கொள்வார்களா? தமது சந்தைகளை பிரித்தெடுத்துக் கொள்வார்களா?.

    மூலதனத்தின் தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.நாடுகள் சபை மூலதனத்தின் தேவைகளுக்காக நலிவடைந்துவிடுமா? ஐக்கியநாடு சபை தனது வரலாற்று கடமை முடிவடைந்தது என்றே சந்தேகப்படவேண்டிதாகவுள்ளது. வாசகர்களின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.

    Reply