அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

261009serje.jpgசர்வதேச அழுத்தங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையின் நீதித்துறை மிகவும் ஒழுங்கான முறையில் செயல்பட்டு வருகின்றது என்றும் இதனை பயன்படுத்தி எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியும் என்று தெரிவித்த அவர், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விடயத்தில் ரஷ்யா இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ளது என்றும் தெரிவித்தார். குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான அந்நாட்டின் உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கூட்டாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஷ்ய அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்தும் வகையிலேயே ரஷ்யா இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. தேசிய ரீதியான ஒருமைப்பாடு, நல்லிணக்கம் போன்ற நடைமுறை சாத்தியமான முடிவுகளை ரஷ்யா இந்த ஒத்துழைப்புக்களின் மூலம் எதிர்பார்க்கின்றது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவடைந்து காணப்படுகின்றது. பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், சுற்றுலாத்துறை மேம்பாடு, சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

கண்ணிவெடிகளை அகற்றும் விடயத்தில் ரஷ்யா ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.  இந்த ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதுடன் மிதிவெடிகளை அகற்றும் விடயத்தில் அனுபவம் வாய்ந்த குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 52 வருடங்களாக ராஜதந்திர உறவுகள் காணப்படுகின்ற போதிலும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *