லத்வியா நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை விண்ணில்; இருந்து விழுந்த பெரிய பாறை போன்ற கல்லால் பூமியில் 15 மீட்டர் ஆழமும் 5 மீட்டர் அகலமும் உடைய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்தக் கல் எஸ்தோனியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ள நகர் ஒன்றில் விழுந்தது. கல் ஆகாயத்தில் இருந்து வரும் போது நெருப்புப் பிழம்பு போல் இருந்ததாகவும், பார்ப்பதற்கே பயமாக இருந்ததாகவும் அதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கல் விழுந்த பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கல்லை பார்ப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
கல்லின் ரசாயனத் தன்மையை சோதித்த அந்நாட்டு ராணுவத் துறை இரசாயணவியல் விஞ்ஞானிகள், அந்தக் கல்லில் கதிர்வீச்சு அளவு குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்தனர்.
அந்தக் கல்லை எரிகல்லாக இருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கல்லை சோதிப்பதற்காக லத்வியா நாட்டு பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.