“ஒபரேஷன் என்ரபே”யை விடவும் கே.பியை கொண்டுவந்தது சாதனை

இஸ்ரேலிய படையினரின் ‘ஒபரேஷன் என்ரபே’ நடவடிக்கையைவிட மிகத் திறமையாகச் செயற்பட்டு இலங்கைப் படையினர் கே.பியை (குமரன் பத்மநாதனை) கொழும்புக்கு கொண்டு வந்தார்களென்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்த கே.பியைக் கொழும்புக்குக் கொண்டு வந்ததே பெருஞ்சாதனை. விசாரணையை ஆறுதலாகச் செய்துகொள்ளலாம். ஐ.தே.க.வினர் இப்போது முட்டாள்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் “கே.பி மீதான விசாரணையை அரசு கைவிட்டுவிட்டதாக ஐ.தே.க. எம்.பி அகில விராஜ் காரியவசம் கூறுகிறாரே” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, “ஐ.தே.க. ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது தொடர்பாக அவரின் செயலாளராகவிருந்த கே. எச். ஜே. விஜேதாச தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சீரழிவு இன்னமும் தொடர்ந்தே வருகிறது”

“இஸ்ரேலிய படையினர் உகண்டாவிலிருந்து விமானத்தை மீட்டு வருவதற்காக ‘ஒபரேஷன் என்ரபே’ நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதன்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், நமது இராணுவத்தினர் ‘என்ரபே’ நடவடிக்கையைவிடத் திறமாகச் செயற்பட்டு கே. பி. யைக் கொண்டுவந்தார்கள்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *