வவுனியா முகாம்வாசிகளுக்கு நடமாட்ட சுதந்திரம்

lankaidsleavingcamp.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தால் 6 மாதங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே சென்று வருவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் அதிகாரிகளிடம் அவர்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதலாம் திகதி மாத்திரம் சுமார் பத்து ஆயிரம் பேர் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்றதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தவர்கள் நேற்றுக் காலை 6 மணி முதல் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தமது பெயர், விவரங்களை உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்ட பின்னர் விசேட அனுமதிப் பத்திரத்துடன் இவர்கள் சுதந்திரமாக வெளியேறியதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

சுதந்திரமாக வெளியேறியவர்கள் தமக்கு வேண்டிய இடங்களுக்கு சென்று வருவதற்காக நிவாரணக் கிராம வளாகத்திலேயே நேற்று 14 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்று சுதந்திரமாக வெளியேறியோருள் பலர் நண்பகல் 12 மணிக்குள் நிவாரணக் கிராமத்துக்கு மீண்டும் வந்துவிட்டதாகவும் ஏனையோர் நான்கைந்து நாட்கள் கழித்தே வருவதாகக் கூறிச் சென்றிருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இவர்கள் வவுனியா மாவட்டம் மட்டுமன்றி யாழ்ப்பாணம் உள்ளிட்ட தூர இடங்களுக்குச் சென்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் நேற்று வரை மீளக் குடியமர்த்தப்படாத நிலையில் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சுமார் 700 தொடக்கம் 800 பேர் வரை நேற்று சுதந்திரமாக தாம் விரும்பிய இடங்களுக்கு சென்றதாகவும் அவர் கூறினார். வெளியேறியவர்கள் மீண்டும் நிவாரணக் கிராமத்துக்கு வரும்போது தமக்கு வழங்கப்பட்ட நுழைவுப் பத்திரத்தை தம்முடனே எடுத்து வருவது அவசியமெனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *