ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெற்று காபந்து அரசாங்கம் ஒன்றை அவர் அமைக்கும் போது அந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொள்ள மாட்டார். உத்தேச காபந்து அரசாங்கத்தில் பெரிய பொறுப்புகள் எதனையும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாகப் போட்டியிடும் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த வாரமளவில் மேலும் கட்சிகள் முன்னணியில் இணையவுள்ளன. இவர்கள் அனைவரும் எம்முடன் இணைவதற்கு காரணம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் நோக்கமேயாகும். விஜயதாச ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியில் உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் புதன்கிழமை இணைந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பல மில்லியன் வரிமோசடி மற்றும் ஏனைய அரச துறைகளில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அறிக்கையை தயாரிப்பதற்கு பொறுப்பாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.