இராணுவத் தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்ப துடன் சரத் பொன்சேகாவின் கூற்றை அடிப்படையாகக் கொண்ட ஐ. நா. சபையின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது நேரடி அவதானத்தைச் செலுத்தியுள்ளதுடன் ஐ. நா. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளாரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் தெரிவித்ததாவது:-
இவ்விவகாரத்தை எவரும் தேர்தலோடு சம்பந்தப்படுத்தக் கூடாது. இது தாய் நாட்டையும் தாய் நாட்டை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினரையும் களங்கப்படுத்தும் விடயமாகும். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு முழு உலகத்தின் பாராட்டுக்கும் உரித்தான எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள இக் குற்றச்சாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றில்லாமல் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.
இது சரத் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான போராட்டமல்ல, படையினரையும் நாட்டையும் அபகீர்த்திக்குள்ளாக்கவே பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக வந்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.