இலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளிவருமெனவும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தினம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 அல்லது 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருப்பதால், பெரும்பாலும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெறும்.
இலங்கையின் 6 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர் தெரிவு கடந்த 2004 ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் திகதி இடம்பெற்ற அதேவேளை, முதலாவது நாடாளுமன்ற அமர்வு அதே மாதத்தின் 22 ம் திகதி இடம்பெற்றது.