தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்காக தந்தை செல்வாவினால் விட்டுச் செல்லப்பட்ட அரும்செல்வம்.

imagescarsy7hn.jpgவடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி மேற்கிலும் தெற்கிலும், மத்தியிலும் வாழ்கின்ற தமிழ் மக்களும், ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும்.அரசுடன் முரண்படுவதற்காக அன்றி, ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே. இதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை. என்னையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்தவரையில் சமாதானத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு பொது திட்டத்திற்கமைய அனைவருடனும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ சௌமியமூர்த்தி தொண்டமான், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ.ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி ஆகியோரின் ஆசீர்வாதத்தோடும், ஆதரவோடும் ‘ஈழத்து காந்தி’ என அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கௌரவ எஸ்.ஜே.வி செல்வநாயகம் கியூ.சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதை எதிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியாது. தமிழ் காங்கிரசும், கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியும் இணைந்து உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். இந்த இரு கட்சிகளின் அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த காலம் தொடக்கம் திருவாளர் கௌரவ மு.திருச்செல்வம் கியூ.சி, கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி, கௌரவ ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி, த.வி.கூ யின் செயலாளர் நாயகமும் அன்றைய எதிர்கட்சி தலைவருமான கௌரவ அ.அமிர்தலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. வெ.யோகேஸ்வரன், கௌரவ மு.சிவசிதம்பரம், கௌரவ தா.திருநாவுக்கரசு, கௌரவ. அ.தங்கதுரை, கௌரவ.க.துரைரெட்ணம் பா.உ, கௌரவ. கே.இராசலிங்கம் பா.உ, கௌரவ. வீ.என். நவரட்ணம் பா.உ, கௌரவ. எஸ்.கதிர்வேற்பிள்ளை பா.உ, கௌரவ. மு. ஆலாலசுந்தரம் பா.உ, கௌரவ. வீ.தர்மலிங்கம் பா.உ மற்றும் முன்னாள் யாழ் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், திரு பொன்.சிவபாலன் இன்னும் பலர் உள்ளுரிலும், வெளிநாட்டிலும் ஈமக் கிரிகைகளுக்காக எடுத்துச் சென்ற வேளையில் புனிதமானதும், அனைத்து தமிழ் மக்களாலும் மதிக்கப்பட்டதுமான உதயசூரியன் கொடியினால் போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனர்.

உதயசூரியன் சின்னத்தை கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதிலாக வீட்டுச் சின்னத்தை கொண்ட தமிழரசு கட்சியை மீள இயங்க வைக்க எவருக்கும் அவசியமும், தேவையும் இருக்கவில்லை. தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தமிழரசு கட்சியை செயலிழக்க செய்து வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை வளர்த்தெடுத்தார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 500 வாக்குகளால் தோல்வியடைந்த ஒரு தொகுதியைத் தவிர ஏனைய 19 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது.

மறைந்த தலைவர்கள் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை சமாதானத்தையும், அகிம்சையையும் பேணிகாக்க தொடர்ந்து வரும் பல தலைமுறைகளுக்கு பரம்பரை சொத்தாக விட்டுச் சென்றுள்ளனர். தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் தான் உருவாக்கி செயலிழக்க வைத்த தமிழரசு கட்சி என்றாவது ஒருநாள் தான் தமிழ் மக்களின் உரிமைகளை சாத்வீக முறையில் வென்றெடுக்கவென வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதற்கு யாரும் உபயோகிப்பார்கள் என்று கனவில் கூட ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.

என்னைப் பொறுத்தவரையில் நாட்டுக்கும் எனது மக்களுக்கும் கட்சியின் நலனுக்காக தம் உயிரை அர்ப்பணித்த பல்வேறு தலைவர்களுக்கும் எனது கடமையை செய்து விட்டேன். அகிம்சைக்கு கட்டுப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் என்றும் பூட்டப்பட்டு இருக்காது. அதற்கு முரணாக இக் கட்சியை காப்பாற்றி தலைவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு கஷ்டங்கள், இடையூறுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

கட்சியில் நான் தொடர்ந்து செயல்படுவது எவருக்கேனும் இடைஞ்சலாக இருக்குமேயானால் இக் கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்க தயாராக இருக்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலட்சியத்துக்காக உழைக்கக்கூடிய இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கட்சியுடன் இணைந்து பேராசையும், பேராவலும் கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற பகிரங்கமாக அழைக்கின்றேன். கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக உழைக்கும் அனைவரும் எம்முடன் இணையலாம் என்றும் கூறிவைக்க விரும்புகின்றேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ
16-02-2010

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • rohan
    rohan

    ” 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 500 வாக்குகளால் தோல்வியடைந்த ஒரு தொகுதியைத் தவிர ஏனைய 19 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது” // சங்கரி

    1977 தமிழீழம் அமைக்க ஆணை கேட்டு அதற்குத் தமிழர்கள் தந்த அங்கீகாரம் என்று ஒரு கருத்து உள்ளது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஐயா?
    தாங்கள் எழுதுகிற பகிரங்க மடல்கள் போல இக் கேள்விக்கும் பதில் வராது அது எனக்குத் தெரியும். இருந்தாலும்…..

    Reply
  • john
    john

    தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்காக தந்தை செல்வாவினால் விட்டுச் செல்லப்பட்ட அரும்செல்வமா? தரித்திரமா? ஜயா ஆனந்தசங்கரி பதில் சொல்லுங்கள் இந்த கூட்டணி தானே ஜயா இவ்வளவையும் தொடக்கி வைத்தது அது மட்டுமல்ல பிரபாகரனை பாவித்து எத்தனை கொலைகளை செய்வித்ததும் கூட. இன்று தமிழ் மக்களின் இந்த நிலைக்கு இந்த கூட்டணியும் தான் காரணம். ஆரம்பகாலங்களில் நீங்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாமலே இந்த பிரச்சினைக்கு பரிகாரம் தேட முடியாமலாபோனது எல்லாம் உங்களின் பாராளுமன்ற கதிரைகளுக்காகவும் உங்களின் சுய திருப்பதிக்காகவுமே அரசியல் செய்துள்ளீர்கள் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடவில்லை.

    ஜயா ஆனந்சங்கரி உங்களது 75வது பிறந்ததின விழாவினை நீங்கள் தமிழர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த வேளை லண்டனில் எட்மன்டன் என்ற இடத்தில் நடாத்தினீர்கள். அதற்கு நீங்கள் சொன்ன பதில் கூட்டணி உறுப்பினர்கள் விருப்ப்படுகிறார்கள் நான் மறுக்க முடியவில்லை என்று. இப்படித்தான் நீங்களும் கூட்டணியும் தமிழ் மக்களை பாவித்து உங்கள் வாழ்க்கையை கடத்திவிட்டீர்கள். இப்போது தமிழ் மக்கள நடுத்தெருவில் உள்ளனர். சரி இந்த கூட்டத்தை தலைமை வகித்து நடாத்திய சுதா என்ற முன்னாள் மாவட்டசபை உறுப்பினரின் இன்றய நிலை என்ன? அவர் ஏன் கூட்டணியை விட்டு விலகினார் ஏன்; வுவுனியாவில் தேர்தல் காலத்தில் சுதா என்ற இந்த கூட்டணி உறுப்பினரை ஓரம் கட்டினீர்கள். இவற்றுக்கு பதில் சொல்லாமல் வெள்ளை வெட்டி கட்டீக்கொண்டு திரிகிறீர்கள். அது மட்டுமல்ல கூட்டணிக்கு உயிர் கொடுப்பதாக மீண்டும் உங்கள் தனிப்பட்ட நலன் அந்திம காலத்திலும் செய்யவே நீங்கள் திட்மிடுகிறீர்கள்.

    உங்கள் கூட்டணியில் முன்னணி செயற்ப்பாட்டாளர்களுடன் பேசும் போது வெளிவரும் உங்கள் சம்பந்தமான பல கதைகளை கேட்க்க காது கூசும் அவர்களால் முன்வைக்கப்படும் கருத்து ஜயா ஆனந்தசங்கரி ஒரு குள்ள நரி என்பதேயாகும்.

    அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே. இதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை என்ற உங்கள் கருத்தை பாருங்கள் நீங்கள் இப்படி எத்தனை வருடங்கள் இதை கதைத்து உங்கள் வாழ்வை முடித்துவிட்டீர்கள். அதுமட்டுமல்ல இறுதி வரை உங்களுக்கு பதவி கேட்கும் கள்ளத்தனம் உங்களிடம் உள்ளது இதன் வெளிப்பாடுகள்.

    என்னையும்> தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்தவரையில்// கூட்டணி என்பதே இப்போது நீர்மட்டும்தானே வேறுயாரும் இருப்பதாக என்றுமே எதிலும் நீங்களும் சொன்னதில்லை கூட்டணி அறிக்கைகளையும் கேட்டதில்லை. ஆக இது தனிமனிதன் கட்சியாக உள்ளது.

    செளமியமூர்த்தி தொண்டமான்> ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோரின் ஆசீர்வாதத்தோடும்> ஆதரவோடும் ‘ஈழத்து காந்தி’ என அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கெளரவ எஸ்.ஜே.வி செல்வநாயகம் கியூ.சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதை எதிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியாது. இப்படி இணைந்து செயற்பட முடியாது என்பதற்கான காரணங்களில் ஒன்று இவர்களில் எவரக்கும் மக்கள் மீது கடமை உணர்வு இருந்ததில்லை தமது சுய நலன்களை மட்டுமே கருதியேதான் இவை இருந்தது.

    இன்று ரிஎன்ஏயில் உள்ள சம்பந்தருடன் ஒரு உடன்னபாட்டுக்கு வரமுடியாத ஜயா ஆனந்தசங்கரி யாருடன் கூட்டு சேர்வது பற்றி, இந்த ஒரு மனிதன் கம்பனி அறிக்கை விடுகிறது.

    //வெளிநாட்டிலும் ஈமக் கிரிகைகளுக்காக எடுத்துச் சென்ற வேளையில் புனிதமானதும்> அனைத்து தமிழ் மக்களாலும் மதிக்கப்பட்டதுமான உதயசூரியன் கொடியினால் போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனர் //

    ஜயா உங்களின் இந்தக்கருத்தை பாருங்கள் இதிலும் உங்களுக்கு தேவை பகட்டான மரியாதையையே தவிர உங்கள் இந்த அறிக்கையில் தமிழ் மக்களின் மீதுள்ள அக்கறை என்ன என்று சொல்லுங்கள்?

    உண்மையை சொல்வதானால் நீங்களும் சம்பந்தரும் உடனடியாக எல்லா பதவிகளையும் விட்டுவிலகி ஒதுங்குங்கள். மீண்டும் கூட்டணி என்ற பேய்க்காட்டலை தொடங்காதீர்கள். இதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள செய்யும் கடையாகும்.

    பாருங்கள் தமிழ் மக்கள் ஒரு வேளை உணவிற்காக தவிக்கும் போது உங்களின் பிரச்சினைகள் என்ன என்று கட்சி, கொடி, பாரம்பரியம். ஆவரங்கால் சம்பந்தர் இத தமிழ் மக்களுக்கு தேவையா? தயவு செய்து கூட்டணியின் மட்டக்களப்பு பிரதேச உறுப்பினர் ஒருவர் சொன்னது போல் உடனடியாக ஓய்வு எடுங்கள்

    /தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் தான் உருவாக்கி செயலிழக்க வைத்த தமிழரசு கட்சி என்றாவது ஒருநாள் தான் தமிழ் மக்களின் உரிமைகளை சாத்வீக முறையில் வென்றெடுக்கவென வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதற்கு யாரும் உபயோகிப்பார்கள் என்று கனவில் கூட ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்// இதே போன்று தமிழ் மக்களும் உங்களை கனவிலும் நினைக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

    /என்னைப் பொறுத்தவரையில் நாட்டுக்கும் எனது மக்களுக்கும் கட்சியின் நலனுக்காக தம் உயிரை அர்ப்பணித்த பல்வேறு தலைவர்களுக்கும் எனது கடமையை செய்து விட்டேன்.// ஜயா நீங்கள் கூட்டணி சமாதான விருது என்றெல்லாம் பேசி உங்கள் குடும்பத்தை வளர்த்துவிட்டீர்கள் மக்களுக்காக நீங்கள் செய்த சேவைகள் என்ன?

    /கட்சியில் நான் தொடர்ந்து செயல்படுவது எவருக்கேனும் இடைஞ்சலாக இருக்குமேயானால் இக் கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்க தயாராக இருக்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலட்சியத்துக்காக உழைக்கக்கூடிய இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கட்சியுடன் இணைந்து பேராசையும்> பேராவலும் கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற பகிரங்கமாக அழைக்கின்றேன். கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக உழைக்கும் அனைவரும் எம்முடன் இணையலாம் என்றும் கூறிவைக்க விரும்புகின்றேன்// நீங்கள் கடைசிப்பந்தியில் கூறியவைகள் எல்லாம் பம்மாத்து. நீங்கள் என்றுமே கூட்டணியை விட்டு விலகமாட்டீர்கள் காரணம் இப்படி பேசித்தான் உங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறீர்கள். முடியுமானால் இன்றே கூட்டணியை விட்டு ஒதுங்குங்கள் ஏன் கூட்டணியை கூட மூடிவிடுங்கள் மக்கள் நிம்மதியாக வாழ இதுவே உதவி செய்யும்.

    Reply
  • thurai
    thurai

    தமிழர் விடுதலைக் கூட்டணியே ஈழத்தமிழரின் இன்றைய நிலைமைக்குப் பொறுப்பேற்கவேண்டும். துரையப்பாவைக் கொன்றது முதல் இறுதி யுத்தம் வரை அழிந்த தமிழரின் உயிர்களிற்கெல்லாம், ஆரம்பித்த தமிழர் விடுதலையே காரணம்.

    நீங்கள் ஒரு அகதிகள் முகாமினையோ அல்லது அனாதைகள் இல்லத்தினையோ பராமரிப்பதை கையிலெடுத்தால் தமிழர்களிற்கு சேவை செய்தவர் என்ற பெயராவது கிடைக்கும்.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    சங்கரியார் திருந்த மாட்டார் என முன்னமே சொன்னேன். இல்லை , அவர் திருந்திட்டார் என்று சிலர் தேசத்தில் எழுதினார்கள். இல்லை, இவர்கள் திருந்தியும் பிரயோசனம் இல்லை. எனவே இவர்கள் நமக்கு தேவையே இல்லை.

    Reply
  • anwar
    anwar

    இளைஞர்களுக்கு வழிவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் ஐயா. சம்பந்தர் இற்கும் இது பொருந்தும்.
    மே 18 இயக்கத்தில் இணைந்து அதனை பலப்படுத்துங்கள். முள்ளிவாய்க்கால் உடன் முடிவடையவில்லை போராட்டம்.

    Reply
  • Ajith
    Ajith

    Honourable Leader of the TULF,
    We all should respect the democracy. You took over the leadership of TULF forecefully using loopholes in the Sri Lankan legislation. It is not the legislation but peoples voice that determines the leadership and its party. You contested under the TULF and people have said clearly “Please go away”. You don’t need to give the TULF anybody. It is not the same TULF now. People will decide who should lead them. It is better for you to respect people’s voice. It is good for people and you. Will you listen to people?

    Reply
  • palli
    palli

    இதுக்குதான் பார்த்திபன் சொன்னார் புதியவர்கள் தமிழர் அரசியலுக்கு வரவேண்டும்; அதை நாம் ஏற்று கொண்டு உதவவேண்டும் என; அதுக்கு பதில் சொல்லும் போது பல்லி சொன்னேன் புதியவர்கள் வர வேண்டும்; அதுவும் ஈழத்தில் இன்னல்படும் மக்களில் இருந்து வர வேண்டும் என; அதுக்காக பல்லி எந்த விட்டு கொடுப்புடனும் செயல்பட மறுக்க மாட்டேன்; இது பின்னோட்டமல்ல எனது வாக்குமூலம்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நன்றி பல்லி,
    நான் முன்பு சொன்னதை சுட்டிக்காட்டியமைக்கு. அதில் நான் தெளிவாகவே, அந்தப் புதியவர்கள் அந்த மக்களிலிருந்தே தெரிவாக வேண்டும் என்பதையும் எழுதியிருந்தேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சங்கரியார் முன்பு உருவான கூட்டணி பற்றி நன்றாகவே கதை சொல்கின்றார். கேட்க நன்றாகத் தானிருக்கின்றது. அப்போது தாயகத்திலிருந்த என் போன்றவர்களுக்கு என்ன நடந்ததது, என்ன நடக்கின்றது, என்ன நடக்கப் போகின்றது என்பது தெரியாது, என்று நினைத்து விட்டாரோ புரியவில்லை.

    1976 இல் ஒன்றாகக் கைகோர்த்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தோடு கூட்டணி கண்டார்கள். ஆனால் சில நாட்களிலேயே தொண்டமான், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் இந்தக் கூட்டணியின சுயரூபம் தெரிந்து ஒதுங்கி 1977 பொதுத் தேர்தலில் தமது கட்சிகளின் சார்பாகவே போட்டியிட்டார்கள். அன்று கூட்டணி இளைஞர்களை உசுப்பேற்றி அவர்களை போராட்ட வேள்வியில் பலியாக்கி அந்தச் சூட்டிலேயே குளிர் காய்ந்தார்கள். அன்றைய கூட்டணியும் சரி இன்றைய கூத்தமைப்பும் சரி, தமது இருப்பையும் வருவாயையும் தக்க வைக்க மற்றையவர்களை பலிக்ககடாவாக்கும் சிந்தனையுள்ளவர்கள். இவர்களின் இந்த மனநிலையை மாற்றியமைக்கும் நிலையில் இவர்களுமில்லை. எனவே இந்தச் சுயநல விரும்பிகள் யாவும் ஓரம் கட்டப்பட வேண்டும். புதியவர்கள் உள்வாங்கப்பட்டு நல்ல தலைமைகள் அந்த மக்களாலேயே அந்த மக்களிலிருந்து தெரிவாக வேண்டும். அதற்குச் சிறிது காலமெடுக்கலாம். ஆனால் அதன் ஆரம்பம் இன்றே தொடங்கப்பட வேண்டும்.

    அடுத்ததாக தேசம்நெற்றில் கருத்தெழுதும் சிலர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, தமிழ் மக்கள் ஏற்று தமிழீழத்தை அங்கீகரித்து 1977 தேர்தலில் அமோக வெற்றியை கூட்டணிக்கு கொடுத்தனர் என்று கதையளந்தும் வருகின்றனர். அப்படியானவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து தேர்தல் திணைக்களத்தின் 1977 இன் தேர்தல் முடிவுகள் பக்கத்திற்குச் சென்று அங்கு விபரங்களைப் பார்த்துவிட்டு, உங்கள் கதையளப்புகள் சரியா என்று சரி பார்க்கவும். தமிழ்ப் பகுதிகளில் எத்தனை தொகுதிகளில் கூட்டணி போட்டியிட்டு எத்தனை தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளனர்? எத்தனை தொகுதிகளில் விழுந்த வாக்குகளில் 50 வீதத்திற்கு அதிகமானவாக்குகள் பெற்றனர்?? எத்ததனை தொகுதிகளில் 50 வீதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர்?? என்பதையும் பாருங்கள். மொத்தமாக தமிழ்ப் பகுதிகளில் விழுந்த வாக்குககளில் 48 வீதம் கூட தமிழர் கூட்டணிக்கு விழவில்லையென்ற உண்மையும் தெ(ளி)ரியும். இது அமோக வெற்றியல்ல, தமிழீழத்தை தமிழ் மக்கள் அங்கீகரிக்கவும் இல்லையென்ற உண்மையும் புரியும். புரிந்து கொண்டு எனிக் கதையளளப்பதையும் நிறுத்தலாம்………

    1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் விபரங்களைப் பார்வையிட :
    http://www.slelections.gov.lk/pdf/Results_General_1977.PDF

    Reply