கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை நம்பவேண்டாம் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணி எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. பயங்கரவாதியெனவும் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை அவர் தவறான விதத்தில் வழிநடத்திச் செல்லக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
கே.பி. கைதாகி பல மாதங்கள் கடந்திருக்கும் நிலையில்அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறிவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.முன்னாள் புலித்தலைவருடன் இணைந்து செயற்படுவதற்கான அரசின் ஆர்வமானது பாதுகாப்பு படைகளின் மனநிலையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கை என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.
அத்துடன், கே.பி.யை சிறை வைக்கத் தவறியமை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதர் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கிறார். இதனால், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை அல்லது அவரை சிறைவைக்காமல் அரசாங்கம் சில சமயங்களில் இருக்கலாம். இது வெட்கக்கேடான விடயமாகும்.
ஏனென்றால் பிரிகேடியர்கள், ஜெனரல்கள் போன்ற யுத்த கதாநாயகர்கள் பலர் இன்று சிறையில் உள்ளனர். அதேசமயம் பயங்கரவாதிகள் உல்லாசமாக உள்ளனர் என்று பொன்சேகா டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்