ஜனநாயகமயப்படுத்தல் – ரவி சுந்தரலிங்கம்

10 புரட்டாசி 2009 – சாராம்சம்: இலங்கையில் இன்றுவரை தீர்க்கப்படாத இனப் பிரச்சனை அடிப்படையில் ஜனநாயக உடமைகள் பற்றியது. பிரதேச ரீதியிலான சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இப் பிரச்சனைக்கும் சிங்கள மக்களது கிளர்ச்சிகளுக்கும் பொதுக் காரணிகளாக இருந்துள்ளன. ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்கம் பற்றிய அரசியலும்; வாக்களிப்பும் அல்ல, அவை மக்களது உடமைகள் பற்றியவை. இவ்வுடமைகள் தனி-மனித ரீதியிலும் சமுதாய, சமூக ரீதிகயிலும் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டியவை. சர்வதேசிய மயப்படுத்தல் என்பது முதலாளித்துவத்தின் சந்தைப்படுத்தல் ஆயினும் புரட்சிகர தொழிலாள அகராதிகளில் அமைந்தவை ஆகினும், ஜனநாயகத்தின் பரிமாண வாதங்களால் தொடர்பு படுத்தக் கூடியவை என்பவற்றை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

1. புலிகளது/புலிகளால் அழிவு

19/5 இலங்கைத் தீவின் அரசியலில் பாரிய திருப்புமுனை என பல அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது. தமிழர்களது இன்றைய நிலை, அவை குறித்து புலிகளது நேரடி/மறைமுகமான பங்கு, சாதக/பாதகமான விளைவுகள், என்பவற்றை மட்டுமே கொண்டு இக் கணிப்புக்கு வருபவர்களே பலர் உள்ளனர். இவற்றின் மேல் ஜனநாயகம், தொழிலாளர் உடமைகள் அவர்களது வாழ்க்கைத்தரம், பிராந்தியத்தின் பாதுகாப்பு அதன் ஸ்திரம் என்பவற்றைக் கொண்டு இம் முடிவுக்கு வருபவர்களும் உண்டு.

எவ்வழி தேர்ந்தாலும், இவர்கள் இடது/வலது எனக் கடைப் பிடிக்கும் இடைவெளி அற்றுப்போவதும், அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின் விளக்கங்கள் ஈற்றில் பல விடயங்களில் ஒரு இனப்படுவதும் சில வேளைகளில் ஆச்சரியமானவை. மேலும், இந்நிலமைக்கான அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்கியது நாமே என ஜே.வி.பியும், சில தமிழ் ஆயுதக்குழுக்களும் உரிமைகோருவது வியப்பூட்டுபவை ஆயினும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

புலிகளது கட்டுப்பாட்டில் தமிழ் பேசும் சமுதாயங்கள் பேச்சற்ற ஊமைகளாக, மூச்சு விடமுடியாது வாழும் பிராணிகளாக, அறிவிலும் ஆற்றல்களிலும் தேக்கம் கண்ட மனித முண்டங்களாக முடங்கி வாழ்ந்தார்கள் என்பது உண்மை. எமது தாயங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புகலிகள் கூட அரசியல் கலாச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாத மனோவியல் நிலைப்பாட்டை உருவாக்கி வைத்திருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது. தமது ஆதரவாளர்களை மிக உக்கிரமாக பணம் சேகரிக்கும் இயந்திரங்களாகவும், மக்களை பணம்-கறக்கும் பசுக்களாகவும் மட்டுமே கருதிய காலம் இது. எனவே, புலிகள் ஜனநாயகத்திற்கு குந்தகமானவர்கள் என்பதில் ஐயமே இல்லை.

ஜனநாயகம் என்ற கருத்திற்கே இடமில்லை என மாற்று அமைப்புகளை இல்லாது செய்து, மாற்றுக் கருத்துக்கள் தம்மிடையேகூட இருப்பதைத் தவிர்த்து, தாமே தமிழர்களது ஏக-பிரதிநிதிகள் என்று இருந்தும், உலக நாடுகள் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ராஜிவின் படுகொலைக்குப் பின்னர் இந்தியாகூட இந்நிலையை ஏற்றுக் கொண்டு தீர்வுகளை தேடியது. சிறீலங்காவும்தான் புலிகளுடன் மட்டுமே உடன்பாடுகளுக்கு வந்தது. எனவே, ஜனநாயகம் என்பதில் இந்தப் போக்கில் பங்குபற்றிய வெளிநாடுகள் எப்படியான நிலைப்பாட்டை கொண்டிருந்தன, முதன்மைப்படுத்தின என்பதை உணராது, ஏற்படுத்திய புறச் சூழ்நிலைகளை அவதானியாது, ஜனநாயகமயப்படுத்தல் பற்றி பேசுவது பொருத்தமற்றது.

இலண்டனில் புலிகளது கெடுபிடிகளைத் தாண்டுவதற்கு ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்கள் சங்கர் ராஜி, இரத்தினசபாபதி ஆகியோரது இறப்புகளின் பின்னடியிலான ‘நினைவு மாகாநாடுகள்’ தேவைப்பட்டன என்பதிலும் பார்க்க, அதற்கான காலம் பங்குனி 2007 வரை ஆகிற்று என்பதே குறிப்பிட வேண்டியது.

இவ்வாறு புலிகளது அடக்கு முறையின் ஆழத்தை அதன் வீச்சை என்றுமே உணர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளாத போதிலும், “புலிகளது அழிவு என்பது ஜனநாயக-மறுமலர்ச்சியின்” தொடக்ககாலம் என்ற கூற்றை எம்மால் ஏற்று கொள்ள முடியாமல் இருப்பதற்கு மேற்படி நாம் சுட்டிக்காட்டிய புறச் சூழ்நிலையே உணர்த்தப் போதுமானது. இதனத் தவிர்த்தால், இலங்கையின் ஜனநாயகம் என்பது புலிகளது நடத்தையில் மட்டுமே தங்கி இருக்கவில்லை என்ற எமது விளக்கமே போதுமானது.

ஆனால், புலிகளது அழிவு தமிழ்பேசும் மக்களது கைகளில் இருந்திருந்தால், மேற்கத்திய நாடுகளது உதவிகள் இந்தியாவின் ஆதரவு சீனாவின் ஈடுபாடு என உலகாளாவிய ‘சதியுடன்’, எம்மரும் சேர்ந்து நடத்திய மக்கள் அழிவுப் போர்த் திட்டமாக அமைந்திராவிட்டால், சிறீலங்கா அரசிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே உள்ள சரித்திர பூர்வமான உடமைப் பிரச்சனைக்கான தீர்வுடன் இடம் பெற்றிருந்தால், ஏன், சில புலி எதிர்ப்புவாதிகளது வெறியுடன் கூறினால், “குறைந்தபட்சம் பல ஆயிரம் மக்களது படுகொலைகளுடன் முடிந்திராவிட்டால்”, சிலரால் சில வேளைகளில் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இது உணர்வு பூர்வமான வாதம்.

மேலும், “கள்வனை கண்டுபிடிக்க இன்னொரு கள்வன் வேண்டும்” எனும் ஆங்கில பழமொழிபோல, ஒரு ஜனநாயக விரோத சக்தியை அழிப்பதற்கு அதற்கு மேலான ஜனநாயக விரோத சக்தி தேவைப்படும் என்பதால், இலங்கை தீவையையே தீயிடுவது போலாகிடும் என்றோம். இன்று எமது வாதங்களுக்கான பதில்கள் கண்முன் உள்ளன. இலங்கையின் சகல அரச, சமுதாய, சமூகக் கட்டுகளும் ஜனநாயகம் இழந்தவையாக இருப்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயம். அதேசமயம், எவ்வாறு ஜேர்மனியர்களை மனிதாபமற்ற மனித-விரோதிகளாக சரித்திரம் பூராக கணிப்பதற்கான மனோநிலையை யூதர்களதும் மற்றைய ஐரோப்பியரதும் படுகொலைகள் ஏற்படுத்தியதோ, அதேபோன்ற நிலைக்கு தமிழ் மக்களது படுகொலைகள் சிங்கள மக்களையும் அவர்களது அரசையும் சரித்திரத்தில் நிறுத்தி உள்ளது என்பது மேலும் வருத்தத்திற்குரிய விடயம். இவ்வாறான அவதூறுனை சம்பாதிப்பதால் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு என்ன பலன் எவ்வளவு செலவு என மனோவியல் ரீதியில் வினவுவது தவிர்க்க முடியாதது. இவ்வகையில் சிங்கள மக்களது பாரம்பரியங்கள் சொத்துக்கள்-பெறுமானங்கள் (assets) மாசுபட்டுள்ளன என்று கூறுவது தப்பா என்றும் சிந்திக்க வேண்டும்.

இதற்கு மேலாக தமிழ் மக்களது சொத்துக்கள்-பெறுமானங்கள் என்ற கேந்திர ரீதியிலும் எமது பதில்கள் இருக்க வேண்டும் என்பதால், “வீட்டுள் நச்சுப் பாம்பு புகுந்துவிட்டால் சுற்றாருடன் சேர்ந்து வீட்டையே தீயிடுவதில்லை” என்ற நிதானத்துடன் புலிகளை அணுக வேண்டும் என்றோம். ஆகவேதான், புலிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் “இறுதித் தீர்வில் அவர்களது இயற்கையான சமைவும் இருக்க வேண்டும்” என்றோம்.

ஆனால் ஜனநாயகம் பற்றிய விசித்திரமான வாதங்கள் பலதரப்பட்டவை. கடந்த ஆண்டு இலண்டன் வந்த ஜே.வி.பி பா.உறுப்பினர் நா. சந்திரசேகர், “நாம் மற்றவர்கள் போல புலிகளது இனவாதப் போருக்கும், இனவாதங்களுக்கும் எதிராக வாய்ப் பேச்சுடன் நின்று விடவில்லை. அதற்காக அயாராது நிலத்தில் கருமமும் ஆற்றினோம். புலிகளை அழிக்க வேண்டும் அல்லது பலவீனப்படுத்த வேண்டும் என்பது எமக்கு முதலாவது கருத்தாக இருந்தது. எனவே, மகிந்தாவை பதவிக்கு கொண்டுவருவதே தகுந்த உபாயமாகவும் எம்மால் கணிக்கப்பட்டது. எமது உழைப்பு இல்லாது மகிந்தா வென்றிருக்க முடியாது.” என்ற தமது விளக்கத்தை தருகிறார். மறு கணமே, “புலிகளுடன் அழிக்கப்பட்டது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களது ஆயிரமாயிரம் வருடங்களான சரித்திரமும் அவர்களது பலமும் வீரமும் அவர்களது நிலம் மீதான ஆளுமையும் கூடவே” என்கிறார். இவற்றை இணைத்துப் பார்ப்பவர்கள் அவர் கூற்றுகளிடையே உள்ள முரண்பாடுகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதைப் புரிந்து கொள்வர். ஆனால், அவை அரைவாசி விளக்கமே.

மிகுதி: “1. நாம் சிறீ லங்காவின் தேசிய விடுதலைக்காகப் போராடுகிறோம், 2. தமிழர்களது பூர்வீக-நிலம் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது, 3. அதிகார/நிர்வாகப் பரவலாக்கம் என்பது பொறுப்பற்ற விடயம், 4. இந்திய-ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதால் நாம் 13ம் சீர்-திருத்தத்தை நிராகரிக்கிறோம், (Further reading, reference 10) 5. ஜே.வி.பி அரசுக்கு வந்தால் தமிழ் பேசும் சமுதாயங்கள் இன ரீதியில் முன் வைக்கும் கோரிக்கைகள் அவசியமற்றவை ஆகிவிடும்”.

புலிகளை அழிக்க அல்லது பலவீனப்படுத்த மகிந்தாவை ஜனாதிபதியாக்கிட தமது தோழர்களது உழைப்பையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள் ஜே.வி.பியினர். ஆனால், புலிகளோ அதே மகிந்தாவை ஜனாதிபதியாக்கி தம்மை அழித்துக் கொள்ள அவரிடமிருந்து பணத்தையும் பெற்று தம் மக்களது வாக்குரிமையும் ‘ரத்துச்’ செய்கிறார்கள். இவை இரண்டையும் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது, புரிந்து கொள்வது? யாதார்த்த வாதத்தால், வெறும் அரசியல்வாதிகள்/ கட்சிகளை முதன்மைப்படுத்திய கருத்துச் சொல்வதால் சரிதிரத்தின் துண்டுகளுக்கு விளக்கம் சொல்பவர்கள் உண்டு.
ஆனால், மக்கள் வாழ்வே அரசியல் என உணர்ந்து ஏற்றுக் கருமம் ஆற்றுபவர்களால் எப்படி இவ் விளங்கங்களை ஏற்றுக்கொள்ள முடியும்?

ஜேவிபியினரது மக்கள் விடுதலைப் போர்களினால் கண்ட ஜனநாயகப் பலா பலன்களை சாதாரண சிங்கள மக்களது அனுபத்துடன், இனங்கள் பிரதேச கலாச்சார வேறுபாடுகள் என்பவற்றுடன் இணைத்துப் பார்க்கும்போது, மேலுள்ள ஐந்து குறிப்புகளும் ஒட்டு மொத்தமாக ஜனநாயக விரோத நிலைப்பாடுகள் என வகைப்படுத்துவது பொருத்தமானது. இவற்றினை, தொழிளார்-சர்வாதிகாரம் என்பதை ஒரு-கட்சிச் சர்வாதிகாரமாகவும் இறுதியில் அதனை ஒரு இனத்தின் சர்வாதிகாரமாகவும் மாற்றிடும், மூன்றாம் உலக வளர்ச்சிகளில் பின்தங்கிய தேசியவாதப்-புரட்சிவாதிகளது குளப்பவாதம் என சரித்திரம் தந்த படிப்பினைகளுள் உட்படுத்தும் போது ஜனநாயகம்பற்றிய இவர்களது விளக்கமும் துலக்கமாகிறது.

ஆகவே, புலிகளது இன ரீதியான தேசியவாதத் திட்டமும், ஜேவிபியினரது தேசியவாதம் கொண்ட புரட்சித் திட்டமும், பிராந்திய வாரியாக எழுந்த இளைஞர்களது அதிருப்த்தியே என்பதும் சமூக-ஜனநாயகத்தை வேண்டிய ஆதங்களின் அடிப்பிறப்பாக இருந்தபோதும், ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்குகளுள் முடங்கியதும் ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அப்படியாகின், ஜனநாயகப்படுத்தல் எனும்போது நாம் எவற்றைக் குறிப்பிட முடியும், அவற்றை எவ்வாறு வரைவிடுவது என்பவை அடுத்த அத்தியா அவசியமான காரியமாகிறது. பதிலாக நாம் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட சித்தாந்த வரைவு இலக்கணங்களை மட்டுமே ஒப்பியாது, பலவிதமான உலகளாவிய போக்குகளைவும் அவதானித்து எமது வரைவுகளைக் தேர்ந்து கொள்ள வேண்டியது கடமை என்பதிலும் பார்க்க, மக்களது உடன்பாட்டை ஈடுபாட்டை பெற வேண்டுமாயின் அவசிமானது என்பதும் புரிய வேண்டியதாகிறது.

ஜனநாயக மாதிரிகள் (Theoretical models)

சரித்திர ரீதியில் ஜனநாயகம் என்பதற்கான வரைவுகளின் நிலைதளங்கள் (framework)

1. அரசியல் – பொருளாதாரம், (political versus economical) , 2. நடைமுறை, செயலாக்கம் – நிறைவான பொருளாக்கம் (procedural versus substantial) , 3. விடுதலை – அடக்கு முறை (liberal versus non-liberal) என்பவற்றின் இடையேயான வாதப் பிரதிவாதங்களாகவே இருந்து வந்துள்ளது. இவற்றுடன் நான்காவதாக பிரஜாஉரிமை – சர்வதேசியம் (citizenship and universality) என்பவையும் இணைக்கப்பட வேண்டும் என்பது எமது பிரத்தியேக வாதம்.

இவ்வகையில் மேற்கத்தய ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவை மீளாய்வு செய்யப்பட வேண்டியவை, செய்யப்பட்டும் வந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் முடிவுகளின் போது ஜோஸேப் ஸ்ஸம்றர் போன்றோரதும் (Schumpeter, Joseph. 1943. Capitalism, Socialism, and Democracy, NY – Harper), சோவியத் கால முடிவு காலத்தில் அடம் பிவோக்ஸ்ஜி (Przeworski, Adam et. al. 2000. Democracy and Political Development: Political Institutions and Well-Being in the World, 1950 – 1990, NY – CUP) போன்றோரது எழுத்துக்களும் மேற்கத்திய ஜனநாயகத்தை 1. தேர்தல் குறித்த நடைமுறை வழக்காகவும் (electoral process), 2. பிரதானமாக, ஸ்தாபன ரீதியிலான அதிகாரமாகவுமே (institutional power) அடையாளம் காட்டி உள்ளன.

இவற்றின் சாரமாக றொபேட் டால் என்பவர் முன்வைத்த எட்டு “உரிமைகளை” இவ்வகைப்பட்ட ஜனநாயகத்தை வரைவுதரும் தேர்வுப் பட்டியலாகக் (check list) கொள்ளலாம்:

1. வாக்களிக்கும் உரிமை, (right to vote) 2. தேர்வு செய்யப் படுவதற்கான உரிமை, (right to be elected) 3. ஆதரவுக்கும் வாக்குகளுக்கும் போட்டியிடும் உரிமை, (right to compete for votes & support) 4. இடையூறுகள் தடைகளற்ற தேர்தலுக்கான உரிமை, (right to free & fair elections) 5. ஒன்று கூடும் உரிமை, (right to free association) 6. கருத்துச் சுதந்திரம், (right to free expression) 7. மாற்று தகவல் தாஸ்தாவேதுகளுக்கன வளம், (right to alternative source of information இறுதியாக, 8. வாக்குகளிலும் கருத்துச் சுதந்திரத்திலும் தங்கிய நிர்வாக அமைப்புகள் என்பவையாகும் (institutions that depend on votes and other expressions of preference). இவற்றை “குறைந்தபட்ச அளவு கோலாகக்” கொண்டு அரசியல் பொருளாதார நிர்வாக அமைப்புகள் உருவாக்கப் படவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. (Dhal, Roberts. 1971. Polyarchy; 1989. Democracy and its Critics. New Haven: Yale UP)

இங்கே, ஜனநாயகத்தின் ஆழமும் வீச்சும், வெறும் பிரதிநிதித்துவத்தின் ஆளுமை (governance by representation) என மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பது உணரப்பட்டது. எனவே, ‘விடுதலையும் சுதந்திரமும்’ (liberty & freedom), “நீதியும் நியாயமும்” (justice & fairness), “வாழ்வில் வெற்றி கொள்ளும் தளமும் வாய்ப்பும்” (opportunity & success in life), போன்ற உன்னதமான விளைவுகளை ஊர்ஜிதம் செய்வதே ஜனநாயகம் என்ற வாதமும் உருவாக்கப்பட்டது.

மாக்ஸினது சரித்திரம், பொருளாதாரம், அரசியல் என்பவை குறித்த தர்க்கீக வாதங்கள் மேற்கத்திய ஜனநாயக வரையறுப்புகளை மாற்றி அமைத்திடுவதில் எவ்வளவு உதவின என்பது புரிந்த விடயம். அவற்றின் விளைவே ‘சமூக அவசியங்கள்’ (social requirement) என்ற வாதம் ஜனநாயகச் சித்தாந்தின் மூன்றாம் பரிமாணம் தருவது எனலாம்.

மாக்ஸினது சித்தாந்த வாதங்களையோ கவனிக்காது, மனிதன் அடிப்படையான பொருளாதார அவசியங்கள் பூர்த்தி செய்ப்படாத பட்ச்சத்தில் ஜனநாயக நடைமுறைகளில் பூணமான தனது பங்கை வகிக்க முடியாதவன், ஆகவே ‘சமூக அவசியங்கள்’ என்பது ஜனநாகயத்தின் அங்கமாகிறது என்று வாதிடப்பட்டது. (Marshall, T. H. 1992. Citizenship and Social class. London: Pluto Press; 1997; Huber, E. et.al. The paradoxes of contemporary democracy: Formal, Participatory, and social democracy) இவற்றின் அடிப்படையிலேயே, 1940 களில் அமரிக்க ஜனாதிபதி ரூஸ்வோல்ற் (F.D. Roosevolt) தனது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக “தேவைகளில் இருந்து விடுதலை” (freedom from wants) என்ற வாதத்தை முன்வத்திருந்தார்.

புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தமே பொருத்தமானது என்ற வாதம் முதலாளித்துவத்தை பூரணமாக ஏற்றுக் கொண்டது என்பதற்கல்ல. அவ்வகையில், ஜனநாயகத்தின் குறைபாடுகளை அன்றாடம் எதிர்முகம் கொண்டவர்கள் ‘உரிமைகள்’ என்ற வரைவுக்குள் ‘அடிப்படையில் சட்டத்தின் முன்னே சம உரிமை’, ‘பெண்களுக்கு சம உரிமை’, ‘சிறுபான்மையினருக்கு சம உரிமை’, என்ற எல்லைகளை முற் கூட்டி சென்ற வண்ணம் உள்ளனர்.

புரட்சி என்றவாறு தொழிற்துறைகளில் (industrial) வளர்ச்சி கண்ட மக்களது சித்தாங்களை உள்வாங்க முற்படும் போது, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் சிக்கல்களை குளப்பங்களை அநுபவ ரீதியில் அறிந்தவர்கள் நாம். ஆகவே, அதே வழி சென்று சமூக-பொருளாதார வளர்ச்சி கண்டவர்கள், தனிமனிதர்கள் – சமுதாயங்கள்; – சமூகங்கள் என்ற ஒழுங்கில் கட்டி எழுப்பும் “மனித-உரிமைகள்” என்ற சித்தாந்தங்களை நேரடியாக உள்வாங்கிட முடியாது.

இலங்கை போல் சமூக-பொருளாதார வளர்ச்சிகளில் பின்தங்கிய நாடுகளில் அரசு-அரசாங்கம்-ஆளுமை என்பவற்றிக்கு இடையேயான உறவுகளை குடியானவர்-ஜனநாயகம் (feudal democracy) என நாம் வரைவு செய்துள்ளோம். (Further reading, references 7 and 8) இவ்வாறான நாடுகளில் ஜனநயாகம் எவற்றை குறித்து நிற்கிறது, ஜனநாயகத்தின் பேரில் நிலை நாட்டப்பட வேண்டியவை எவை, அவற்றை நிலை நாட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன, அவற்றின் சித்தாந்தாந்த விளங்கங்கள் வேலைத் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? என்பவைபற்றிய ஆய்வுகள் வேண்டியவை.

மேலும், அவற்றிக்கான ஆய்வுகள் செயற்திட்டங்களாக ஆகும்போது விளைவுகளை நேரடியாக அநுபவிப்பவர்கள், நடைமுறைப்படுத்த முற்படுபவர்கள், அரசியல் குழுக்கள் கட்சிகள் என பல தரப்பினரிடையே கலந்தாலோசனைகள் இல்லாது போகின் ஜனநாயகமயப் படுத்தல் என்பதே அர்த்தமற்ற விடயம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முதலில், ஜனநாயகம் என்பது முதலாளித்துவ-ஜனநாயகத்தை குறிப்பிடுவதால் நாம் முழுமையான-ஜனநாயகம் அல்லது பூரண-ஜனநாயகம் என்பதன் வரைவைத் தரவேண்டி உள்ளோம்.

பூரண-ஜனநாயகம்: “சமுதாய-உடமைகள் சார்ந்த உரிமைகளுடன், கூட்டாகவும் தனிமனிதனாகவும், தத்தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளையும் அவற்றின் உத்தரவாதங்களையும் தன்னியக்கமாகக் கொண்ட ஸ்தாபனமயப்படுத்தலை பூரண-ஜனநாயகம் எனக் கொள்ளலாம்.”

பூரண-ஜனநாயகம்பற்றிய எமது வரையறுப்பு இதுவாக, அவற்றுள் அமைந்துள்ள சில பதங்களது விளக்கமும் அவசியமாகிறது.

சமுதாய-உடமைகள்: “தலைமுறைகளாக மனிதரது உழைப்பினால் உருவாக்கப்பட்டு பல நுகர்வுத் தன்மைகளிலும் பெறுமதி கொண்ட பொதுச் சொத்துக்கள் அவையாகும்.”

தலைமுறைகளது உழைப்பின்றி காட்டு நிலம் பயிர் நிலமாகவும், நிலத்தின் கீழ் புதைந்து கிடைக்கும் தாதுப் பொருட்கள் புகையிரத வண்டிகளாகவும் அவை ஓடும் தண்டவாளங்களும் ஆவதில்லை.

தலைமுறைகளாக சேர்க்கும் அறிவின்றி, பதப்படுத்திய நிலங்களில் எவற்றைப் பயிரிடுவது என்தைத் தேர்ந்தெடுக்கவும், தலைமுறைகளாக மனிதரது சிந்தனைகளின் தொடர்பில் விளையும் அறிவு இல்லாவிடில், இன்றைய விஞ்ஞான தொழி-நுட்பங்கள் என அழைக்கப்படும் மனிதனது கைங்காரியம் இடம்பெற்றிருக்கவும் முடியாது.

பல நூற்றாண்டுகளாக மனிதரது சிந்தனை-முயற்சியும் உழைப்புமே, தலைமுறையாக அதன் சேகரிப்புமே எமது அறிவு என்பதையும், அவனது உழைப்பின்றி சடப் பொருட்கள் பயன் தரும் ஏதுக்கள் கருவிகள் வளங்களாக உருவாகி விடுவதில்லை என்பதையும் நாம் உணரவேண்டும்.

மனித-உரிமைகள் என்ற விடயத்தை போய் சேர முன்னர் குளப்பங்களைத் தவிர்த்திட இவ்விடத்தில் தனிச் சொத்துப்பற்றிய வரைவைத் தரவேண்டியதும் எமது கடமையாகிறது.

தனிச்-சொத்து: “மனிதன் தனதென்று கொள்வதெல்லாம், அவை அவன்கையில் இருக்கும்போது அவற்றில் ஏற்படக்கூடிய பாராமரிப்புக்கும் இயன்றால் முன்னேற்த்திற்காகவும், அவனது நுகர்வுக்கும், தற்காலிகமாக அவன்வசம் உள்ள சமுதாயத்தின் பொதுச் சொத்துகளேயாகும்.”

ஜனநாயகப்படுத்தல் எனும்போது முதலாவது கேள்வி எதனை? யாரை? என்பதே.

மகிந்தா ராஜபக்ஷா பதவி ஏறியமை ஜே.வி.பியினர் தமது உழைப்பைக் கொட்டியதாலா, அல்லது புலிகள் தமது மக்களது வாக்குகளைப் பறித்தமையாலா என்ற கேள்விகளில்தான் தங்கியிருக்குமாயின், எமது சமூகம் பொருளாதாரம் இலட்சியச்-சரித்திரம் சர்வதேசிய நிலைப்பாடு என்பவை பற்றிய அறிவோ தெளிவோ அவசியம் அற்றவை ஆகிவிடும்.

சரித்திரத்தை வெறும் கதையாக (narrative), தனிமனிதரது அரசியற் கட்சிகளது அல்லது குழுக்களது நடத்தைகளூடாக அவதானித்து, அதன் முக்கிய பாகங்களை அந்நடத்தைகளின் விளைவுகளாகக் கற்பிப்பதையே சரித்திரமாக ஏற்று இயங்குபவர்களே மேலதிகமானவர்கள்.
இது காலம் கடந்த, சரித்தித்தைக் கணிப்பது பற்றிய விஞ்ஞான வளர்ச்சியை அறியாத வழி, என்பவற்றிலும் பார்க்க இது தவறான வழி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது என்பதே முக்கியமான விடயம்.

மாற்றாக, தனிமனிதரையும் குழுக்களையும் சரித்திரத்தின் விளைவுப் பொருட்களாகவும், அதனுடன் ஒட்டி-உராயும் (interacting) அதன் அங்கங்களாகவும் கொண்டு “மூலதனைத்தை உழைப்பவர் யார் – அதனைச் சேமிப்பவர் யார்” என்ற அடிப்படைக் கேள்வியுடன் நிகழ்வுகளைக் கணிப்பீடு செய்வதை இலட்சியச்-சரித்திரம் (objective-history) என்பர்.

ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சியின் முன்னர் இலங்கைத் தீவு நிம்மதியன வாழ்வில் இருந்தது. அதுவரை படு-கொலைகளை அறியாத மக்களும், குறிப்பாக இளைஞர்களும், பாதுகாப்புத் துறையினரும் கொடூரமான மனிதர்களாக மாறினர். வன்முறையை இலங்கையர் வாழ்வில் அவர்கள் புகுத்திய பின்னரே நாடு பாழாகத் தொடங்கியது. இவ்வாறான வன்முறைபற்றிய சரித்திரக் கதை சொல்லபவர்கள் உண்டு. அதுபோலவே, புலிகள் தோன்றியதாலேயே தமிழ் பேசுவோர் வன்முறையை அநுபவிக்க நேரிட்டது துரோகி என்ற பதமே உருவாகிற்று என அதே கதையின் தொடர்ச்சி சொல்பவர்களும் உண்டு.

ஆனால், இவை சில தெட்டங்களான சம்பவங்களை தொடர்புபடுத்தும் கதைகளே அன்றி இலட்சியச்-சரித்திரமல்ல. ஜே.வி.பி அல்லது புலிகள் எக்காரணிகளின் வழித்தோன்றல்கள்? ஆகாயத்திலிருந்து குதித்தார்களா? அவற்றின் தலைவர்கள் விஜேவீரா, பிரபாகரன் போன்றோரை எவ்வாறான சூழ்நிலைகள் பெற்றுத் தந்தன? அவற்றிலும் மேலாக, அரசியலில் வன்முறை வழி ஈடுபடுவதற்கான காரணிகள் என்ன? என்றவாறான கேள்விகளுக்கோ சிந்தனைக்கோ, சம்பவங்களூடாக மட்டும் காரணம் கூறிடும் சரித்திரத்தில் அமைப்பு-ரீதியில் (structural) தொடர்போ ஓட்டமோ இருக்கமாட்டாது என்பது தெளிவு.

சமூக-ஜனநாயகம் பொருளாதார-ஜனநாயகம் அரசியல்-ஜனநாயகம் என எந்த வரைவுகளுள் இருந்து பார்த்தாலும், தெற்கு ஆசியாவில் மட்டுமின்றி பல மூன்றாம் உலக நாடுகளில் குழு-வாதமும் சமுதாய-வாதமும் குடும்ப-வாதமுமே ஆளுமை கொள்ளுவதை நாம் அவதானியாது போயிட முடியாது. குடியானவர் சமுதாயங்களை அடியாகக் கொண்ட போது இவை எதிர்பார்க்க வேண்டியவையே என்ற வாதம் ஒரு விளக்கமே. எமது தெற்கு ஆசியாப் பிராந்தியத்தில் இப்போக்கு இராணுவ மயப்படுத்தப்படும் அரச அமைப்புகளே ஸ்தாபனங்களாகி வருவதையும், மக்கள்-நிர்வாக அமைப்புகள் நிர்முலம் செய்யப்படுவதையும் காண்கிறோம். இதனை பாக்கிஸ்தான்-மயப்படல் எனச் சித்தரிப்பதும் உண்டு. இலங்கையும் இவ்வழி செல்கிறதா? அப்படியான கருத்தும் கணிப்பும் பொருத்தமானவையா?

பாக்கிஸ்தான்-மயப்படல்

பாக்கிஸ்தான்-மயப்படல்: “குடியானவரான மக்களைக் கொண்ட, அவர்களது அதிகாரங்கள் ஆளுமைகளுக்கு அப்பாற்பட்ட, அவர்களது அபிலைசைகளின் வரைவுகளுள் இல்லாத, உள்ளார் வெளியார் ஸ்தாபனங்களது அதிகாரப் போட்டிகளிடையே அகப்பட்டும் அவை மீது தங்கியும் உள்ள அரச-ஸ்தாபனங்கள், அவற்றிக்கு அப்பாற்பட்ட இமைப்புகள் யாவும் பாக்கிஸ்தான்-மயப்படுத்தலுக்கு உட்பட்டவையும், அதன் வடிவத்தைத் தருவனவும் எனலாம்”.

பாக்கிஸ்தான் பல மொழி பேசும் சமூகங்களைக் கொண்டு மதம் என்ற பொது உணர்வில் இயற்றப்பட்ட பிரதேச-அமைப்பு (geographical entity). அதன் பிரதேசம் குறிப்பாக சிந்து, பஞ்சாபி, காஸ்மீரி மக்களது சமூகச் சொத்துக்களின் பாகப் பிரிவுகளால் ஏற்படுத்தப்பட்டது. அதன் மக்கள் காலாகாலமாக அங்கு வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் எஞ்சியவர்களதும் இந்தியா என இன்று அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து வெளியேறியவர்களையும் கொண்ட சமூகக் கூட்டங்களாகும். அதனது, ஆளுமை மக்களது மத-அடையாளத்திலும், இந்தியாவுடனான சரித்தரக் குரோதங்களாலும், தன்உணர்வாகிவிட்ட பலவீனங்களாலும் வரைவு செய்யப்பட்டு, அதன்படி அமைந்த வெளிநாட்டு உறவுகளால் நிச்சயிக்கப்படுவது.

மதத்தின் பெயரில் அமைந்த அதிகார-அமைப்பினுள் தமது அதிகாரப் பங்கை நிலைநாட்டிக் கொள்ள இஸ்லாமிய மத-முதலாளிகள் முன்வருவதை எதிர்பாரக்க வேண்டியதே. ஆனால், இந்தியாவுடனான சரித்திரச் சர்ச்சைகள் போர்களாகவும் அவையே அதனது அடையாத்தின் பெரும் பகுதியை வழங்குவதாலும் பாக்கிஸ்தானிய இராணுவம் அதனது அதிகாரப் பங்கு போடுவதில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. மேலும், நாட்டின் விளை-நிலங்களை தமதாக்கிக் கொண்ட பத்து அல்லது பதினிரண்டு முதற்-குடும்பங்கள் (oligarchs) தமது அதிகாரப்-பங்கினைக் கோருவதும் தர்க்கமாகிறது. எனவே, இஸ்லாமிய மத-முதலாளிகள், இராணுவம், முதற்-குடும்பங்கள் ஆகியவை மூன்றுமே பாக்கிஸ்தானின் மக்களை ஆழும் அரசியல்-ஸ்தாபனங்களது மூலங்களாகி, அதன் அதிகாரத்துக்கான போட்டியில் ஈடுபட வேண்டியவையும் ஆகின.

ஆரம்ப காலங்களில் தமது மதம் சார்ந்த விடயங்கள் கருதி, அவைக்கேற்ப்ப தம்மை முதற்-குடும்பங்களுடனோ அல்லது இராணுவத்துடனோ பக்கம் சார்ந்து கொண்டனர் மத-முதலாளிகள். எனவே, அவர்கள் முதற்-குடும்பங்களின் பக்கமாகும்போது ஜனநாயகம் என்ற பெயரில் பாராளுமன்ற நாடகங்களையும், இரணுவம் பக்கம் சாயும் போது இராணுவ-சர்வாதிகாரப் பலவான்களது நடனங்களையும் காணலாம். அண்மைக் காலங்களில் இஸ்லாமிய மத-முதலாளிகள் தமது தொகுதி மீதான ஆளுமையை இழக்கத் தொடங்கியமையையும் அது தலிபான்மயப்படல் (Talibanisation) என்ற மதவழிப் போக்குள் அகப்பட்டதும், அதனால் தன்னுள் பல வகைகளில் பிளவுற்றமையும் நாம் அறிவோம். இவற்றினால், வழமைப்பட்ட அரசியற் அதிகாரப் போட்டியில் இஸ்லாமிய அணி வலுவிழந்தது போலக காணப்பட்டாலும், மாற்று அரசியல் அதிகாரக்-கட்டு (alternative power centres / referred to as non-state actors) என்றவாக்கில் மிக்க வலிமை பெற்றதையும் அவதானித்து இருப்போம். இவற்றுடன் பாக்கிஸ்தானிய அரசாங்கம் தனது அரசியல் இறைமையை பகிர்ந்து கொள்ள முன்வந்தமையையும் அறிவோம்.

அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகினும் அதனது பிரதேசத்துள் அமரிக்கா இராணுவப் பிரவேசம் செய்வதை பாக்கிஸ்தான் தடுக்கமுடியாது உள்ளது. அதனது வடக்குப் பிரதேசத்தில் உள்ள அவ்ப்கனிஸ்தானில் NATO நாடுகளால் நடத்தப்படும் போரில் அதனது பங்கு தனது பாதுகாப்பு அல்லது எதிர்பார்புகளுக்காகவன்றி மேல்நாட்டாரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாகவே உள்ளது.

இவற்றினால், தன்நாட்டில் தனக்கேற்ற வழிகளில் தனது உள்நாட்டு அல்லது பிரதேசப் பிரச்சனைகளை தீரக்க முடியாது, அவற்றிக்கு எதிரான பலமான புறக் காரணிகளால் பாக்கிஸ்தான் அரசாங்கம் தனது-தலிபானுடன் படையெடுப்புப் போர் நடத்தியதையும் கண்டிருப்போம். இப் புறக் காரணிகள் இராணுவத்தையும் முதற்-குடும்பங்களது அரசியற் அமைப்புகளையும் ஒன்றாக்கிட முனைவதையும் ‘அரசைப்’ (state) பலப்படுத்தும் வேலைத் திட்டத்தில் அவற்றினை ஈடுபடுத்த நிர்ப்பந்திப்பதையும் நாம் அவதானித்திருப்போம். இவாறான புறக் காரணிகளின் விளைவுகளுடன் பாக்கிஸ்தானின் சமூக-பொருளாதார, சமூக-அரசியற் புள்ளி விபரங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது அதனை ஒரு தூர்ந்து போன அரசு (failed state) எனக் கணிப்பது சரியானதே.

இலங்கைத் தீவில் உள்ள நிலைமைகள் என்ன? மேற் குறிப்பிட்டவை யாவும் சிறீலங்காவிற்கும் பொருந்துமா? சிறீ லங்கா பாக்கிஸ்தான்-மயப்படலில் உள்ளாகிவிட்டதா?

சிறீ லங்காவின் சமுதாய-வீழிச்சி புலிகளுடனோ ஜே.வி.பியினருடனனோ ஆரம்பமாகவில்லை. பிருத்தானியரிடம் இருந்து விடுதலை பெற முன்னரே அதற்கான அத்திவாரம் அங்கிருந்தது. சமுதாயங்களின் கீளோட்டங்களாக இருந்த பல மக்கள்-விரோத மனிதாபிமான-விரோத வழக்குகள், நியதிகள், உறவுகளாக அவை இருந்த போதும், தேசிய அல்லது கலாச்சார-வெளிப்பாடுகளால் மறைக்கப்பட்டு இருந்தன.

பாக்கிஸ்தான் போலவே இலங்கைத் தீவும் (சிங்கள தமிழ் பேசும்) பல சமுதாயங்களைக் கொண்ட அன்னியர்களால் வரையப்பட்டு நிறுவப்பட்ட நாடு. பாக்கிஸ்தானில் நிர்பந்தமான புதிய இயங்கில் உறவுகள்; பல சமூகங்களை கொண்டதாக இருக்கும் போது, இலங்கையிலோ அது இரு சமூகங்களிடையே உள்ள உறவில் தங்கியதால் உருவத்தில் வேறாகிறது. பாக்கிஸ்தானை ஒன்றுபடுத்தும் ஸ்பனங்கiளாக மதமும் இராணுவமும் முன் வைக்கப்பட்டது, ஆனால் இலங்கையிலோ அவை மக்களைப் பிறிதுபடுத்தும் ஸ்தாபனங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. பாக்கிஸ்தான் நடைமுறை ரீதியில் பஞ்சாபி இனத்தவரின் கைகளில் இருப்பதாகக் அவதானிக்கப்படும் போதிலும், பௌத்த-சிங்களச் சித்தாந்தம் இலங்கையை தனதெனக் கோருவது போல பஞ்சாபியரிடம் ஒரு சித்தாந்தம் இல்லை. ஆயினும், மத ரீதியில் ஒரு நாட்டினை, அதன் மக்களை அடையாளம் காண்பது என்பதில் இவ்விரு நாடுகளும் ஒப்பிடக் கூடியவை. ஆகவே, அதனை பாக்கிஸ்தானிய மயப்படல் என்பதற்கான முதல் அடியாகக் கொள்வது தப்பல்ல என்பது வாதம்.

பாரளுமன்ற அரசு என்பதில் இலங்கை பாக்கிஸ்தானிலும் வேறுபட்டதாகினும், பாராளுமன்றங்கள் சர்வாதிகாரங்களின் கரங்களாகின. இலங்கையில் அது பெரும்பான்மையோரின் பேரில் சோவனிசவாதிகளது, அதாவது இனவாதமதத்துடன் இணைந்த குட்டி முதலாளித்துவர் கூட்டின் கைகளிலும் பாக்கிஸ்தானில் அது இராணுவம்-இஸ்லாமியவாதிகள்-முதற் குடும்பங்களின் சர்வாதிகாரமுமானது. அண்மைக்காலம்வரை இலங்கையில் இராணுவம் பாரளுமன்ற அரசியலில் நேரடித்தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும் அந்நிலையில் உள்ள மாற்றங்களையும் அவதானிப்போர் அதனையே இலங்கை பாக்கிஸ்தானிய மயப்படுகிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாக கூறுவர். ஆயினும், பாக்கிஸ்தானைப் போலல்லாது இராணுவம் தானுமொரு அரசியற் ஸ்தாபனமாக மாறிவிடவில்லை என்பதையும் அது இன்னமும் அரசியல்வாதிகளது ஆளுமைக்குள் உள்ளது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

“தனது மக்கள்” மீது முப்படை கொண்ட போரை நடத்துவதிலும் இவ்விரு நாடுகள் ஒன்றுபடுவதால், இது பாக்கிஸ்தானிய மயப்படலின் மூன்றாவது சான்றாகக் கணிக்கப்படுகிறது.

நாட்டைக் காப்பாற்றுவது என்றவாறு அதிகார வர்க்கங்கள் படுகொலைகள் நடத்தாத நாடுகள் எங்கும் இல்லை, ஆனால் அவை யாவுமே முப்படை கொண்ட போர்த் தொடுப்புக்களால் ஏற்படுபவைவும் அல்ல. மேலும், இந்நிகழ்வுகள் காலத்தின் பேரில் எடை போடப்படும் போது பிரத்தியேகமானவை என்பதும் கவனிக்க வேண்டியது. சிலவேளைகளில், 150 வருடங்களின் முன்னர் இடம் பெற்ற அமரிக்காவின் உள்நாட்டுப்போரை, ஐ.நா, ஜெனீவா ஒப்பந்தங்கள் என்ற சர்வதேசிய ஸ்தாபன மயப்படுதல்களின் பின்னர், இன்று இலங்கையில் பாக்கிஸ்தானில் இடம்பெற்ற முப்படைப் போர்களுடன் பொருத்தமற்ற ஒப்பீடு செய்யும் வெற்று வாதங்களையும்தான் நாம் கண்டுள்ளோம்.

மக்களது கூட்டுப்பாதுகாப்பை நாட்டின் பேரில் நிராகரிப்பததையும், தேசபாதுகாப்பு என்ற நியாயப்படுத்தலை முன்வைக்கும் போதிலும், நடைமுறையில் தனிமனிதரின் சமுதாயங்களின் பாதுகாப்பு துச்சமாக்குவதையே காண்கிறோம். வெள்ளை ‘வான்கள்’ மக்களது பாதுகாப்பிற்காக ஓடித் திரிவதிலை என்பதும், மக்கள் அடையாளமே இல்லாது போவதும், அரச-நிர்வாக ஸ்தாபனங்கள் நேரடியாகவே தமது மக்கள் மேல் இரகசியப் போர் நடத்துவதற்கான அத்தாட்சிகளும் இருப்பதனால், இந் நிலைப்பாடு இலங்கையின் பாக்கிஸ்தான்-மயப்படுதலுக்கு நான்காவது சான்றாகிறது என்பர்.

பல பின் தங்கிய நாடுகளில், 1. அரசு – மக்கள், 2. ஆளுமை – அதிகாரம் என்பவற்றின் உறவுகளில் உள்ள குளப்பங்கள் ஒரு புறத்திலும், 3. உற்பத்தி உறவுகள் – மூலதனம் என்பவற்றின் இடையேயான சச்சரவுகள் மறு புறத்திலும் பினைந்த குளப்பவாத நிலைகளைப் பிறப்பிக்கின்றன. இதனால் பல நாடுகளால் அந்நியத் தலையீடுகள் தவிர்க்க முடியாது போய்விடுகிறது.
ஆனால், மேற் குறிப்பிட்டவற்றில் மூன்றில் ஏதாவது இரண்டின் சீர் அமைப்பால் இத் தலையீடுகளின் விசையினை குறைத்துக் கொள்ள முயலும் நாடுகளே பெரும்பாலானவை. ஆனால், இம்மூன்று விடயங்களின் குளப்ப நிலையைக் கடைப் பிடிப்பதாலேயே தமது அதிகாரத்தை நீடிக்கலாம் என்றவாறு அமையும் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் அதனது பாக்கிஸ்தான்-மயப்படலுக்கு ஐந்தாவது சான்றாகிறது.

இலங்கையின் உள்நாட்டுப் போர்கள், கிளர்ச்சிகள், இனக் கலவரங்கள் காலத்துக்குக் காலம் (periodically) இடம் பெறுவதால், அவை நாட்டின் புத்தி-ஜீவிகள், கல்விமான்கள், திறமை பெற்றவர்கள் (skilled people) போன்ற மனித வளத்தின் வெளியேற்றக் காலமாக அமைவதும் வழக்கமாகிவிட்டது. தன்னிசையில் பொருள்வளம் தேடி புகலிடம் தேடுபவர் எப்போதும் உள்ள போதிலும், இப்போக்கினை ஒரு சாதாரண மக்களது நடவடிக்கை ஆக்கிவிடுவது மேற்குறிப்பிட்டவை போன்ற சமுதாய-அசம்பாவிதங்களே. இவ்வகையில், மனித வளங்களை இழப்பதில் ஒற்றுமை காண்பதால் பாக்கிஸ்தான்-மயப்படல் என்தற்கு இது ஆறாவது சான்றாகிறது என்பர்.

எனவே, ஜனநாயகமயப்படுத்தல் எனும்போது ஒரு புறஎல்லையில் பாக்கிஸ்தான்-மயப்படலை தவிர்ப்பது என்பதையும் மறுபுற எல்லையில் இலங்கை பூரான பூரண-ஜனநாயகம் பற்றிய கடமைகளும், நடவடிக்கைகளும் என்பதும் தெளிவாகிறது.

சமுதாய-மாற்றங்கள்

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 30 ஆண்டுகளில் தனது உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் சில அடியொட்டிய மாற்றங்களைக் கண்டுள்ளது. இவைபற்றிய புள்ளி விபரங்களுடனான ஆய்வு பிறப்பானது. இருந்தும், சமுதாயங்களின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களையும் அவற்றிக்கான சில காரணிகளையும் அவதானிப்புகளாகத் இங்கே தர வேண்டியது அவசியமாகிறது.

இலங்கை காலனித்துவ காலத்தின் பின்னடியில் பெருந் தோட்ட ஏற்றுமதிப் பொருட்களில் தனது 90மூ மேலான அந்நிய வருமானத்தை பெற்றது. இன்று அவை தரும் அந்நிய செலவாணியிலும் பார்க்க வெளி நாடுகளில் வீட்டு-வேலைக்காரர்காளாக பணியாற்றும் பெண்கள், கட்டிடத் துறையின் தொழிலாளிகள் போன்றோரது உழைப்பினால் பெறும் வருவாய் மேலாகிவிட்டது. இவர்களைப் போல விசேட-பொருளாதார-வலையங்களுள் அடிமை ஊழியத்தில் தொழில் செய்வோர் தொகையும் அதிகரித்துள்ளது. மேற்கு மாகாணமும் அதனை அண்டிய பகுதிகளும் வெளிநாட்டுப் பணத்தின் உள்வரவால் வளர்ச்சி கண்டதாக உள்ளன (Central Bank of Sri Lanka Reports 1999 – 2008).

மேலும், வேலை தேடுவோர்களில் 15மூ மேலானோர் அரச பாதுகாப்புத் துறையில் தமது ஊழியத்திற்கு தங்கி உள்ளனர். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் பெரும் பகுதி 56மூ பாராமரிப்புத் துறைகளுள் அடங்கியவையாகவும் உள்ளன. (Sarvananthan, Muttukrishna. 2007. Economy of the Conflict Region in Sri Lanka, East-West Centre, Washington; Asian Development Bank. February 2008. Sri Lanka: Ploitical and Economic Update)

மாகாண ரீதியில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்ததில் இருந்து பிராந்திய மக்கள் பட்டப் படிப்பிலான திறமைகளில் (skills) கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர். இவ்வாய்ப்பு வடகிழக்கில் நடந்த போரினால் அங்கு வாழ்பவர்க்கு பூரணமான தொடர்ந்த பலனைத் தரமுடியாது போகிலும், அவர்களின் சமுதாயங்களின் இடையான உறவுகளின் விதிகளை ஓரளவு மாற்றி அமைக்க உதவி உள்ளது. மலையகத்துத் தமிழர்களிடம் இன்று கல்விவளமும், அதனை ஒட்டிய தன்நம்பிக்கையும் சுயஉணர்வும், வளர்ந்து உள்ளன. அதனால், தமது கொத்தடிமை வேலைகளை விட்டகன்று பட்டினியாகினும் சுயவாழ்வு தேடும் முனைப்புக் கொண்ட தன்மை அவர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளதைக் காணலாம். நாடு பூரான மக்களது வறுமைக்-கோட்டு விகிதாசாரத்தில் 6% முன்னேற்றம் உள்ளபோது மலையகத்தில்மட்டும் 54% பின்னடைவு ஏற்பட்டு உள்ளமைக்கான (World Bank Report. January 2007. Sri Lanka: Poverty Assessment) காரணிகள்பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டிய போதிலும் இளம் சந்ததியினரது நகரப்புற வெளியேற்றமும் அவற்றுள் ஒன்றாகும் எனக் கூறுவதில் தவறில்லை.

தமிழர் மீது சிறீலங்கா நடத்திய போரினாலும், புலிகளால் நடத்தப்பட்ட ஈழப் போர்களினாலும், அவற்றினாலான தாக்கங்களாலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் பாரிய சமுதாய மாற்றங்களை கண்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான தமிழர்களது வெளியகற்றல் அங்கே பல ஊர்கள் சிறு நகரங்களையே அழித்துள்ளன. எனவே, அதே அளவிலான எதிர்மாறான பொருளாதாரத் தாக்கத்தை இம்மாநிலங்களின் காண்பது ஆச்சரியமானதல்ல. ஆண்-பெண் வயோதிபர்-இளையவர் கற்றோர்-கல்வி இழந்தோர் விதவைகள்;, ஊனமுற்றோர் என்ற சகலதுறைகளிலும் மனதவளத்தின் வீழ்ச்சி ஒரு புறத்திலும், மேற்கத்தைய நாடுகளில் புகலிகளாகி அங்கு முன்னேற்றம் கண்டவரது தொடர்புகள் மறுபுறத்திலும் ஊக்கு சக்திகளாக அமைய இங்குள்ளவர் மனோவியல் ரீதியில் தமது எதிர்பார்புகளில் பலபடிகளை எய்தி உள்ளனர்.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பதில் உள்ள பிளறுகள், அதிலும் பிரதேச ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் வேறாகக் கணக்கில் கொள்ப்பட வேண்டியவை. மேலும், அவ்வாறான வளர்ச்சியினால் அதன் வெவ்வேறு மக்கள் சமுதாயங்கள் கண்ட வளர்ச்சி, அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் பிறம்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

இவ்வகையில் மனத-வளங்களையும் மனிதத்தன்-வளர்ச்சியையும் கணிப்பிட்டு அவற்றில் சரிநிகர் தேடுவதே அர்த்தமான வாழ்கைக்கான அடிப்படை வாதம் என்பது எமது நிலைப்பாடு. எனவேதான் சமூக-ஜனநாயகம் (social-democracy) மக்கள்-ஜனநாயகம் (peoples-democracy) பற்றிய கவனம் இன்று எமக்கு அவசியமாகிறது.

மக்களது ஜனநாயகம்

ஜனநாயகம் என்பதை வெற்று அரசியல் நடைத்தையாக, சமுதாய-சிந்தையற்ற பொருளாதார நடைமுறைகளை ஊர்ஜிதம் செய்யும் கருவியாகக் கருதும் வழக்கே உலகெங்கும் உள்ளதால், இலங்கையோ அங்குள்ள சமுதாயங்களோ அதன் தாக்கங்களுள் அகப்படாது போக முடியாது. ஜனநாயகம் என்பதை ஒரு நாட்டின் அரசில்-அதிகாரத்தினைக் கைப்பற்றும் அரசியல்-வழியாக யாவரும் கருதுவதால் அதனை ஏதாவதொரு ஸ்தாபனத்தின் பொறுப்பானதாகக் கருதியே செயற்படுகின்றோம். எனவே, குடும்பத்துள்ளேயோ, மற்றைய மனிதர்களுடனான உறவுகளின் போதோ பாவனையில் கொள்ள வேண்டியதில்லை என்ற பழக்கத்துடனேயே நடந்தும் கொள்கிறோம்..

ஆதலால்,

(1) சாதியம் என்பதை மக்களது அடிப்டையான ஜனநாயகப் பிரச்சனையாகக் கருதுவதில்லை.

(2) எம்மிடையே சொந்த நிலமற்று, நீக்கல் கூரை கொண்ட குடில்களுள், குனிந்து வளைந்து தலைமுறைகளாக சீவனம் நடத்துபவர்களது ஜனநாயக உடமைகள் பற்றிய சிந்தனைகளும் இருப்பதில்லை.

(3) பிராந்தியங்களாக வேறுபடும் எமது சமுதாயங்களது சமுதாய-பொருளாதார நிலைகள்பற்றியோ அவர்களது அபிலாசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதும், அவையும் ஜனநாயகம் என்ற நடைமுறைகளுக்கு உள்ளேயே அடங்குகின்றன என்பதையும் அவதானிப்பதில்லை.

(4) மொழிவாரி இன அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுள் அடக்கப்பட்டு விட்டதால், மாற்று இன மக்களது ஜனநாயக உடமைப் பிரச்சனைகளை எம்முடன் இணைத்துப் பார்ப்பதும் இல்லை.

(5) பெண்களும் ஆண்களைப் போன்றே சகல ஜனநாயக உடமைகளுக்கும் உரித்தானவர்கள் என ஏற்றுக் கொள்வதில்லை.

(6) சிறுவர்களுக்கும் ஜனநாயக உரித்துகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தழிழ் பேசும் சமுதாயங்கள் பிறம்பான இனங்களா? தேசங்களா? என்ற விவாதங்கள் ஒரு கரையிலும், அவை தமது ஒன்றுபட்ட பொதுப்பட்ட ‘தமிழ் மொழிவாரியான தேசத்துவத்தை’ (statehood) அதற்கான அரசியல் அலகுகளை நோக்கிய தேடல் அவசியமா? என்ற வாதம் மறுகரையிலுமாக இனரீதியிலான தீர்வுகளை நோக்கிய ஜனநாயகவாதங்கள் ஒரு புறத்தில் அமைந்துள்ளன. இவற்றிக்கு வரைவும் வடிவும் தருனவாக, புலிகளையும் தமிழீழப் போரையும் வெற்றி கண்டதால் சிங்களமயமாக்கலையே சிறீ லங்கா தேசியத்துவம் என நிலைநாட்ட முயலும் பேரினவாதம் மறு புறத்தில் உள்ளது.

எமது கரிசனமோ அவற்றிலும் மேலாக இவ்விரு மக்களிடையேயும், அவர்கள் மத்தியிலும் இடம்பெற வேண்டிய சமூக-பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும் ஜனநாயக மயப்படுத்தல் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதில் உள்ளது.

சர்வதேசியமும் முதலாளித்துவ-சந்தையும்

மார்க்ஸ் ஏங்கல்ஸின் “பொதுவுடமை பிரகடன” (Communist Manifesto) காலத்திலிருந்து சர்வதேசியம் என்ற வாதம் புரட்சிவதிகளது அரசியல் கைவசம் என்றாகிற்று. ஆயினும் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற அறைகூவலின் அடித்தளத்தில் உள்ள சிந்தாந்தம் நடைமுறைப் பரிணாமம் காண்பதாற்கான காலம் தொலைவாகிக் கொண்டே போகிறது. இதற்கான காரணி காரணங்களை ஆய்வு செய்வோர் விளக்கம் தருவோர் பெருவாரியாக உள்ளர்கள்.

மார்க்ஸ் சொன்னது போல, “உலகை நிலைமைகளை விளக்குவதல்ல, மாற்றி அமைப்பதே முக்கியம்” என ஏற்றுக் கொள்வதாகின், இன்றைய நிலைமைகளில் சர்வதேசியம் என்பதை எடைபோட்டு அதற்கேற்ப்ப எமது செயற் திட்டங்களை அமைத்துக் கொள்வது அவசியமாகும். நாமோ எதிர்மாறாக, புரட்சிகளின் தோல்விகளுக்கு காரணங்கள் கண்டு பிடிப்பவர்களாகவும், யாராவது புரட்சிவாதிகளது துதிபாடிகளாகி அவர்களது பழுதுகளுக்கு குறைவுகளுக்கு மன்னிப்பு-வக்காலத்து வழங்குபவர்களாகவும், சுயசிந்தை இழந்த முடிவுகள் எடுக்கும் திராணி அற்ற பிம்பங்களாக மாறிவிடுகிறோம்.

உலகத்து புரட்சிகள் யாவும் தோல்வி கண்டனவோ இல்லையோ, சீனா இன்றும் பொதுவுடமை நாடோ இல்லையோ, பின்தங்கிய நாடுகளில் தேசியவாதங்கள் முளைவிடுவதும் அவற்றை பெரிய தேசியவாதங்களால் வெட்டி எறிவதும் காலாகால வழக்குகளாகி உள்ளன. அதேவேளை, வளர்ந்த நாடுகள் போலவே மூலதனத்தைக் கொண்டவர்கள் பராமரிப்பவர்கள், தமது முன்னேற்றம் கருதி தத்தமது தேசியவாதங்களின் முதன்மைப்படுத்தலை கைவிட்டு ஒற்றைத் தேசியத்தையும் ‘நாட்டுப் பாதுகாப்பையும்’ ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில், நாட்டின் சில பகுதிகள் சமுதாயங்கள் பிரதேசங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளதையும் உலகளாவிய ரீதியில் தமது வகுப்பு-மட்டங்களை (standards) நிலைநாட்டக் கூடியவையாக உள்ளதையும் அவதானிக்கிறோம். இவை வெறும் மூலதனத்தின் வரம்புடைப்பா என்ற கேள்விக்கு பூரண பதில் இல்லாது போகினும் தேசிய-வரம்புகளுள் அகப்பட்டும்கூட உழைப்பு (labour) பாரிய அளவில் நாடுகடப்பதையும்தான் அவதானிக்கிறோம். இவற்றின் அடித்தளத்தில் முதலாளித்துவச் சந்தையின் சர்வதேசியம் இருப்பதை நாம் யாவரும் அவதானிக்கிறோம், ஆனால் அதுபற்றிய விளக்கங்களில் பாரிய வேறுபாடுகளில் உள்ளோம்.
இவற்றினால் சாதாரண மனிதர்கள், சில சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், பொதுப்படையாக சாராசரி மனிதனுக்கு என்ன பயன் கிட்டியுள்ளது என்பது எடைபோடப்பட வேண்டிய விடயமே.

1. பொதுவுடமை வாதத்தின் சிந்தனா-உணர்வுச் சக்தியினது தாக்கத்திலும் மனிதனது நுகர்வுச் சக்தியால் உலகமக்கள் ஒன்றிழுக்கப் பட்டுள்ளனர் (ஒன்றிணைபு அல்ல).

2. ஐக்கிய அமரிக்கா சீனா இந்தியா ரஸியா போன்ற பெரிய நாட்டின் பேரிலோ, ஐரோப்பா போல நாடுகளின் கூட்டின் பேரிலோ முதலாளித்துவம் சர்வதேசியத்தின் முழுமையான ஆளுமையைக் கொண்டுள்ளது.

3. குடியானவர் சமுதாயங்களைக் கொண்ட சிறிய ‘நாடுகள்’, குறிப்பாக குடியான-ஜனநாயகங்கள், வளர்ந்த நாடுகளது பொருளாதார முன்னேற்றங்களின் நுகர்வுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்காகவும் கொள்வனவுக்காகவும் காணவிளையும் வளர்ச்சி அரசியற்-பொருளாதார சிந்தனை அற்றவையாகவும், அரசியல் சொரிவுகளை சந்திக்க வேண்டியவையாகவும் உள்ளன.

4. மனிதனது பொதுவான ஆதங்கங்கள் தனிமனித-உணர்வுகள+டாக, தனிமனித-உரிமைகள் எனவும், அவற்றின் அடிப்படையில் சமுதாய அல்லது சமூக மயப்படுத்தக் கூடியவை என்பதும் பொது-உணர்வாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

5. ஜனநாயகம் என்பது சர்வதேசியமயப் படுத்தக் கூடிய சித்தாந்த வாய்ப்புகளை வளர்த்துக் கொண்டுள்ளது.

எனவே, நாம் விளக்கம் மட்டுமே கூறுபவர்களாக இல்லாது, சூழலுடன்-செயலுடன் தொடர்பு கொண்டவராக (pro-active) இருக்க வேண்டின், ஜனநாயக மயப்படுத்தல் என்பதை வெறும் அரசில் சாசன மாற்றங்களாக, குறிப்பாக இன ரீதியில் எழும் சர்ச்சைகளை மட்டுமே தீர்ப்பதற்கான அரசியற் காத்திரங்களாகக் கருதாது, சமூக-பொருளாதார சமநிலைகளுக்கான தீர்வுகளையும் சர்வதேசியத்தையும் உள்ளடக்கியவையாக மாற்றிட வேண்டும் என்கிறோம்.

இவற்றினை உலகளாவிய ரீதியில் காத்திரமாகும் வகையில் மனித–உரிமைகள் என்ற நிலைதளத்தில் (human-rights framework), அதன் அடிப்படையில் பிரதிபடுத்தப்படும் மொழியிலும் செயலாக்கங்களிலும் நிர்வாக வழிமுறைகளையும், அவற்றை தொடர்படுத்தும் உறவுகளுடனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறோம்.

இலங்கை அரசின் வடிவமைப்பு 13ம் சரத்தினூடாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான வழிகளைத் தந்துள்ளபோதும் அவை 1. ஜனாதிபதி அதிகாரங்களால், 2. பல்லின மக்களது பாரம்பரிய உடமைகளை அங்கீகாரம் செய்யாது போவதினால், 3. சரத்தில் உள்ள உரிமைகளையே ஸ்தாபன ரீதியில் காத்திரம் செய்ய முடியாமையினால் அடிப்படை மாற்றங்களை காண வேண்டியவை என்கிறோம்.

மேலும் இரு மொழி பேசும் பல சமுதாயங்களை உள்ளடக்கிய நாடு, ஒரு இன மக்களது 1. அரசியலினுள், 2. அரசியற் காலாச்சாரத்துள் தங்கியுள்ளதால், ‘அரசியல்’ என்பதன் நடைமுறைகளிலும் ஜனநாயகம் தங்கிடும் வகையிலான மாற்றங்களையும் அவை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறோம்.

சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் பிரதேச, இன ரீதியான பாகுபாடுகளுள் உட்படுத்தப் படுவதால் ஜனநாயகம் 1. என்பதை சகரும் சமநிலையில் இருந்து நுகர்வதில்லை, 2. என்பது அதிகார துர்ப்பிரயோகமாகிறது.
இன ரீதியில் வட கிழக்கு மலையக மக்கள் இதுவரை காலமும் புறக்கடிக்கப் பட்டார்கள் என்பதையும், அதே தருணம் பிராந்திய ரீதியில் சிங்களச் சமுதாயங்களது அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள என்பதையும் தாஸ்தாவேதுகள் குறிப்பிட்டாலும் இருசமூங்களது பொது அறிவானவை என்பதற்கில்லை (Further reading, reference 9).

சிறீ லங்காத் தேசியத்துவம் சிங்கள மயப்படுத்தல் என்ற அரசியலுள் அகப்பட்டுவிட்டதால் அரச, நிர்வாக, இராணுவ நடத்தைகள்யாவுமே சிங்களமயப்படுத்தல் என்பதே சிறீ லங்காவின் அரசியல்-பொருளாதார நிலைப்பாடுகளாகியுள்ளன.

ஜனநாயகம் என்பது தனிமனிதரிடையே, குடும்பத்தினிடையே, சமுதாயங்களிடையே, சமூகங்களிடையே உள்ள இயங்கியல் உறவுகள்பற்றியது என்பது ஏற்கப்பட வேண்டியது. எனவே, அது அடித் தளங்களில் இருந்து கட்டி எழவேண்டியது என்பதும் சமுதாயக் கட்டுக்கள் (civil societies) அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளையும் ஆதரித்து நிற்பவையாகவும் இருக்க வேண்டிம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று ஜனநாயகக் கட்டுக்களும் வகைகளாகத் தரப்பட்டுள்ள போதிலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லா வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் இலங்கை ஜனநாயகமயப் பட்டுவிடாது என்பதை நாம் சரித்திரத்தின் படிபினைகளாலாவது அறிவோம். ஆதலால், ஜனநாயக மயப்படுத்தல் என்பதே இலங்கைவாழ் சமூகங்களது ஒன்றிணைப்பிற்கான வேலைத் தளம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சமூகங்களது ஒன்றிணைப்பு என்பது சிறீ லங்கா எனும் தேசியம் என்ற பாணியில் சிங்கள மயப்படுத்தலாகுவது ஜனநாயகமயப்படுத்தல் என்பதற்கு எதிர்மாறானது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

ஜனநாயகம் பற்றிய விவாதங்கள், பாராளுமன்றஃஜனாதிபதி ஆட்சி என்றவாறான கொழுப்பை மையமாகக் கொண்ட, மத்தியப்ப படுத்தலுள் (centralised) அகப்பட்டு உள்ளபோது அவை ஜனநாயகப்படுத்தல் என்பதற்கு ஒவ்வாது என்பதும் பிரதேச, இன ரீதிகளிலான அதிகாரப் பரவலாக்கம் என்பவை பற்றிய விவாதங்களும் வன்முறைகளுள் அகப்படாது பரவலாக இடம்பெறும்போதே அரத்த புஸ்டி ஆகிறது என்பதும் உணரப்பட வேண்டும்.

ஜனநாயக மயப்படுத்தல் என்பது அடிப்படையில் தனிமனிதனதும் அவன்சார்ந்த மக்களதும் அதிகாரவலுவாக்கம் (நஅpழறநசஅநவெ) என்பதாகும் எனப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சுருங்கக் கூறின்:

ஜனநாயக மயப்படுத்தல் என்பது,

1.இலங்கை அரசின், அரசியலின் வடிவமைப்பின்,
2.சமூக, சமுதாய-பொருளாதாரத்தின்,
3.தமிழ் சிங்களம் பேசும் சமுதாயங்களின்,

மத்தியில் மனிதனையும் மக்களையும் ஆளுமை கொண்ட ஸ்தாபனங்களாக ஆக்கிடுவதற்கான நடத்தைகள் செயற்பாடுகள் பற்றியவை என்கிறோம்.

முடிவாக, குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுவின் பிரேரணைக்குரிய குறிப்புகள்:

1.சிறீ லங்கா அரச சாசனத்தின் 13வது சீர்திருத்தம் இலங்கை அரசியலின் ஜனநாயக மயப்படுத்தலில் அரசக்-கட்டு என்ற (structrally) ரீதியில், நடைமுறையில் நிர்வாக அதிகாரங்களை மட்டுமே பரவலாக்கும் வகையாயினும், முக்கியமான முதற்படியாகும்.

2.அரத்த புஸ்டியான அரசியற்-பரவலாக்கம், அதாவாது மக்கள் தமது சமூக-பொருளாதார அபிலாசைகளை நேரடியாக பாராமரிப்பதால் தமது பூரண ஜனநாயக உடமைகளை நுகரும் உரிமைகளைத் தரும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் என்பது, பிராந்திய ரீதியிலும் சமூக ரீதியிலும் அணுகும்போதே சாத்தியமாகிறது.

3.பிரிவினை வாதங்கள் பிரதேச சமூக ரீதியில் ஜனநாயகத்தின் அணுகுமுறை அற்ற, அவற்றிக்கான கட்டுகள் வகைகள் இல்லாத பட்சத்தில், அவற்றினை எய்த முனைவோரதும் அதிகாரங்களை மையப்படுத்த விளைவோருக்கும் இடையிலான இயங்கியல் உறவின் முறிவுகளால் ஏற்படுவன.

4.இவற்றிக்கு அடித்தளமாக பிரதேச மக்களது சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின் தங்கலும், வளர்ச்சிக்கு எதிரான அரசியற்-பொருளாதார நிலைப்பாடுகளும் காரணமாக, இலங்கையின் ஜனநாயக மயப்படுத்தலுக்கு எதிரான நிலமைகளையே உருவாக்குகின்றன.

5.பிரதேச ரீதியில் சரி, இன ரீதியில் சரி, இலங்கை பூரானதாயினும் சரி, சமூக-பொருளாதார உடமைகளும் வளர்ச்சிகளுக்கான வாய்ப்புகளும் கொண்ட செயற்பாடுகளே ஜனநாயக மயப்படுத்தலை ஊர்ஜிதம் செய்வன எனக் கொள்ள வேண்டும்.

6.எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியை அல்லது உரிமைகளை முதன்மைப் படுத்துவது அவை பேரிலான தேசிய வாதங்களை முன்னெடுப்பது, அதேவேளை மனிதச் சமுதாயங்களது பூர்வீக உடமைகளை நிராகரிப்பது, யாவும் ஜனநாயக மயப்டுத்தலுக்கு ஒவ்வாதவை.

7.சகல இனங்களும், அவற்றிடையே உள்ள சமுதாயங்களும், ஏற்றத் தாழ்வுகளற்ற சமூக-பொருளாதார வளர்ச்சிகளை காணும்போதே இனப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அடைய முடியும்.

8.ஜனநாயக மயப்படுத்தல், தனிமனிதனதும் மனிதக் கூட்டுகளதும் பூரண ஜனநாகயக உடமைகளை காத்திரமாக்கும் மனித-உரிமைகள் (human-rights) என்ற நிலைதளத்தை (framework) உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

9.ஜனநாயக மயப்படுத்தல் அடித்தளத்தில் மனிதனதும் அவனது சமுதாயங்களதும் ஆளுமை (empowerment) பற்றியது.

Further reading
(கருத்துகளின் விபரங்களுக்கு)

1.Committee on Foreign Relations, United States Senate. Dec 7, 2009. Sri Lanka: U.S. Strategy After the War.

2.Peebles, Patrick. 1990. Colonisation and Ethnic Conflict in the Dry Zone of Sri Lanka, The Journal of Asian Studies 49.

3.Sen, Amartya. 1999. Democracy as a universal value, Journal of Democracy.

4.Sen, Amartya. 10.06.2003. Why Democratisation is not the same as Westernisation, The New Republic Online.

5.Smith, J. W. 2005. Economic Democracy: Political Struggle of the Twenty-first Century, Institute for Economic Democracy Press.

6.Ravichandra, (Ravi) Sundaralingam. 09.04.2010. Parliamentary elections and post civil war trajectories in Sri Lanka. Sri Lanka Guardian.

7.Ravichandra, (Ravi) Sundaralingam. 24.01.2010. Police or military state: That is the question for India. South Asia Analysis Group.

8.ரவிச்சந்திரா, (ரவி) சுந்தரலிங்கம். ஆடி, 2008. அரசியற் பொருளாதாரமும் 13ம் சட்ட சீர்திருத்தமும். ASATiC,-Thesamnet.

9.வசந்தி, சுப்பிரமணியம். சித்திரை, 2010.இலங்கையின் வட கிழக்கு மத்தியமாகாகங்களில் இனரீதியான குடிப்பரம்பல்கள்-வளங்கள்-குடியேற்றத் திட்டங்கள்: ஒரு பார்வை. குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுக் குழுச் சந்திப்பில் சமர்ப்பணம்.

10.அமரசிங்க, சோமவன்ச, சில்வா, ரில்வின். 19.09.2008. இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு. நியமுவா வெளியீடு.

பின்குறிப்பு:
இக்கட்டுரை முக்கிய பகுதி 10.09.09 தேசம் இணையத்தளத்தில் “இலங்கைத் தமிழரது எதிர்காலம்” என்ற தலைப்பில் பதிப்பானது. அதேவேளை, குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்பாடு செய்யும் செயற் குழுவின் பார்வைக்கு London- Leyton, Walthamstow குறிச்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் (03.08.10) குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் (08.08.10) சமர்ப்பிப்பதற்காக திருத்தங்களுடன் தரப்படுகிறது
.

ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary
ASATiC

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.ரவி சுந்தரலிங்கம், “ஜனநாயகம் (மேற்கத்திய)” பற்றியதான உங்களின் ஆழமான வாசிப்புக்கு பாராட்டுகள். இலங்கையில் தமிழருக்கும், சிங்களவர்களுக்கும் பிரச்சனை உள்ளதாக கூறப்பட்டது!. பிரச்சனையின் மத்தியல் ஒரு நிர்வாக (காலனித்துவ)இயங்கி வந்தது ஆகையால், இந்தியா மத்தியஸ்தம் என்ற பெயரில் “நிர்வாக கட்டமைப்பு ரீதியான ஜனநாயகத்தை”, 13வது திருத்தச்சட்டம் என்ற பெயரில் சரிசெய்ய பார்த்தது?. நீங்கள் கூறும் “தனி மனித உரிமை” ஜனநாயகம் ஆகாது!. பாகிஸ்தான் மயப்படுத்தல் என்பது வசதியான (யாருக்கோ), சுலபமான சொல் ஆகும்!. பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் அடையாளம் புறக்காரணிகளால், பலவீனப்பட்டாலும், “தாலிபானைசேஷன்” என்பதன் மூலம், அம்மக்களின் பல்லாயிரம் ஆண்டுகளான வரலாறு பலப்பட்டிருக்கிறது?. இலங்கைத் தமிழர் விஷயத்தில் இது நேரெதிராக நடைப்பெற்றுள்ளது!…

    /2.அரத்த புஸ்டியான அரசியற்-பரவலாக்கம், அதாவாது மக்கள் தமது சமூக-பொருளாதார அபிலாசைகளை நேரடியாக பாராமரிப்பதால் தமது பூரண ஜனநாயக உடமைகளை நுகரும் உரிமைகளைத் தரும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் என்பது, பிராந்திய ரீதியிலும் சமூக ரீதியிலும் அணுகும்போதே சாத்தியமாகிறது./–
    “அர்த்தப் புஷ்டியான அரசியல் பரவலாக்கம்” என்பதனை நீங்கள் மீண்டும், நிர்வாக கட்டமைப்பிடமே இறைஞ்ச்சி நிற்கிறீர்கள்! பிறகு எப்படி, மக்கள் தொடர்பாடல்கள் மூலம் சமூக கட்டமைப்பை பலப்படுத்தமுடியும். முதலில் “ஜே,வி.பி. யை நக்கலடிப்பதை விடுங்கள்!. “ஈராஸை” விட இ.பி.ஆர்.எல்.எஃப்., நடைமுறை ரீதியான விமர்சனத்தை ஜே,வி.பி. மீது கொண்டிருக்கிறது. உங்களைப் போன்றவர்களை விட இந்தியா ஜே.வி.பி.யை அதிக நக்கலுடன் கையாளும் வலிமை பெற்றது!. தற்போதைய தேவை அதுவல்ல. அர்த்தபுஷ்டியான அதிகார பரவலாக்கலுக்கு, நீங்கள் கூறும் மக்களை பலப்படுத்தும் “ஜனநாயக ரீதியான” செயல்பாடுகளுக்கான, அவர்களின் “உண்மையான” பிரச்சனைகள் இதுவரை முன் வைக்கப்படவில்லை என்பதே!…..

    Reply
  • Palyapuli
    Palyapuli

    “புலிகளது கட்டுப்பாட்டில் தமிழ் பேசும் சமுதாயங்கள் பேச்சற்ற ஊமைகளாக, மூச்சு விடமுடியாது வாழும் பிராணிகளாக, அறிவிலும் ஆற்றல்களிலும் தேக்கம் கண்ட மனித முண்டங்களாக முடங்கி வாழ்ந்தார்கள் என்பது உண்மை. எமது தாயங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புகலிகள் கூட அரசியல் கலாச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாத மனோவியல் நிலைப்பாட்டை உருவாக்கி வைத்திருந்ததையும் யாரும் மறந்து விட முடியாது”
    I Know that the people have to come to grips with realities if they want to make an impact in politics and the fate of their destinies.But this is Too Much from The former LTTE supporter Ravi.Ravi’s immediate upsurge of sentiments aftermath of the defeat in May 2009?
    “Opportunism”

    Reply