ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை 5800 இலங்கையருக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச்.எம். பெளசி தெரிவித்தார்.
கோட்டா அடிப்படையில் இலங்கையர் 2800 பேருக்கே புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையிலிருந்து ஹஜ் நிறைவேற்ற செல்வோரின் தொகையை அதிகரித்துத் தருமாறு அமைச்சர் ஏ. எச். எம். பெளசி சவூதி அரசிடம் விடுத்த
வேண்டுகோளுக்கமையவே இவ்வதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெளஸி தலைமையிலான குழுவினர் அண்மையில் சவூதி அரேபியா சென்று சவூதி மன்னர், ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சவூதி அரேபியாவின் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் புசூட் பின் அப்துல் கலாம் அல் பாரிஸ் இத்தகவலை அமைச்சர் ஏ. எச். எம். பெளசிக்கு அறிவித்துள்ளார். ஹஜ்ஜாஜிகளின் தொகையை அதிகரித்து தந்ததற்காக அமைச்சர் பெளஸி, சவூதி மன்னர் மற்றும் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர், அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.