அரசாங்கத்திலிருந்து பிரபா கணேசன் வெளியேற 14 நாட்கள் காலக்கெடு

அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிரணியில் இடம்பெறுவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் தலைவர் மனோ கணேசனின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு அதிகாரபூர்வமாக எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரபா கணேசன் எம்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த அரசாங்கம் பாராளுமன்றத்திலே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும்வகையில் வாக்களிப்பு உட்பட எந்தவித நடவடிக்கையிலும் பிரபா கணேசன் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தற்சமயம் பிரபா கணேசனின்  கட்சி அங்கத்துவம் ஜனநாயக மக்கள் முன்னணியினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தலைவர் மனோ கணேசனினால் பொதுச் செயலாளரின் தலைமையில் பத்து அரசியல் குழு உறுப்பினர்கள் அடங்கிய ஒழுக்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபா கணேசன் எம்.பி. தொடர்பிலான ஒழுக்காற்று குழுவில் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன், மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், முரளி ரகுநாதன், கங்கை வேணியன், ஏ.ஜெயபாலன், ஜோசப் ஜேகப், எப்.எம்.ஷியாம், வி.முரளிதரன், லே.பாரதிதாசன் மற்றும் எம்.ராஜ்குமார் ஆகியோர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *