வன்னியில் மீள்குடியேறிய மக்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களின் அழிவடைந்த வீடுகளை அமைத்துக் கொள்வதிலும், சேதமுற்ற விடுகளை திருத்திக்கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு; வருகின்றனர்.

வீடுகள் முற்றாக அழிவுற்ற மக்களுக்கு  வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகளை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகள் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றரை இலட்ச ரூபா செலவில் சிறிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான பணம் கட்டம் கட்டமாக வழஙகப்படுகின்றன. வீட்டு அத்திவாரம் இடுவதற்காக முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்பட்டு அதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட கொடுப்பனவிற்காக சம்பந்தப்பட்ட மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் வீடமைப்புப் பணிகள் முற்றாக நிறைவடைய வேண்டுமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதன்படி தாங்கள் வீட்டு அத்திவார வேலைகள் முடித்து ஒரு மாதமாகியும் அடுத்த கட்ட வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, வீட்டின் சுவர்கள் எஞ்சியுள்ள நிலையில், கூரைகள் கதவு, யன்னல்களற்ற விடுகளுக்கு திருத்த வேலைகளுக்காக ஒன்றரை இலட்ச ரூபா வழங்குவதாக இன்னொரு நிறுவனம் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் அதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் தாமதமாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் மாதங்களில் பருவமழை பெய்ய விருப்பதால் தங்களின் சிறுபிள்ளைகள் அடங்கிய குடும்பத்தினரோடு எவ்வாறு தங்கள் காணிகளில் தங்கியிருப்பது என்கிற கவலைகள் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *