வவுனியா மனிக்பாம் அகதி முகாம்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் தங்களின் சொந்தக் காணிகளில் குடிறேமுடியாத நிலை எற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கிழக்கு எல்லைகளிலுள்ள மயில்வாகனபுரம், குமாரசாமிபரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கபட்டுள்ளனர். மேற்படிக் கிராமங்களுக்கு அம்மக்கள் அதிகாரிகளால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட போதும், அங்குள்ள படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் அடிக்கடி வன்னிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்சவிற்கும் அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர் பகுதிகளிலும் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.