சர்வதேச கைதிகள் தினத்தையொட்டி நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1312 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 37 பேர் பெண்களாவர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ. ஆர். த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் சிறிய குற்றங்கள் புரிந்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்தோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு ள்ளனரெனவும், நேற்றுக்காலை, பல்வேறு சிறைச்சாலைகளிலும் இக்கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட கைதிகள் தினத்தை சிறப்பாக்கும் வகையில் விசேட நிகழ்வொன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது.
பிரதமர் டி. எம். ஜயரத்னவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.