ஆவணி 02 புரிந்தணர்வுக் குழு (லண்டன்) இலங்கையில் தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டு வருகின்ற உடனபாட்டை வரவேற்று செய்திக் குறிப்பை வெளியிட்டு உள்ளது.
‘‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கின்றோம். இந்த முன்னெடுப்பு தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுடைய பொதுப் பிரச்சினையில் இறுக்கமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பது புலம்பெயர்ந்த வாழ்கின்ற எமது எதிர்பார்ப்பு.
கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டது. மாறாக அவலங்களும் அழிவுகளுமே மிஞ்சியுள்ளன. இப்போது தமிழ் மக்கள் மிகவும் கீழான நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் சிதறுண்டு இருப்பது தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை தொடர்ந்தும் இழப்பதற்கே வழிகோலும். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழ் கட்சிகளிடையே ஒரு புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உணர்வுபூர்வமாக ஏற்பட்டுள்ளதாகவே நாம் நம்புகின்றோம்.
கட்சிகளிடையே உள்ள அரசியல் வேற்றுமைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் தங்கள் தேர்தல் முரண்பாடுகள் வேற்றுமைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் இழக்கப்படுவதைத் தடுக்கவும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் குறைந்தபட்ச புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் வரவேண்டும்’’ என்று அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ் மக்களிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கு, ஆவணி 02 புரிந்தணர்வுக் குழு வினால் உருவாக்கப்பட்ட ‘குறைந்தபட்ச புரிந்தணர்விற்கான முன்மொழிவுகள்’ ஈபிடிபி தலைவர் தேவானந்தா, தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோருக்கு இலங்கை சென்றிருந்த நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனால் நேரடியாக கையளிக்கப்பட்டது.
ஆவணி 02 புரிந்துணர்வுக் குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட கட்சித் தலைவர்கள் தாம் பொதுவேலைத திட்டத்தில் உறுதியாக இருப்பதாக கவுன்சிலர் போல் சத்தியநேசனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ள தமிழரங்கத்திற்கு மூத்தகட்சித் தலைவரான வி ஆனந்தசங்கரி அவர்களே தலைமை தாங்கலாம் என்றும் தலைமை விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னிடம் தெரிவித்ததாக கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார். த சிர்த்தார்த்தன், வி ஆனந்தசங்கரி ஆகியோரும் தமிழரங்கம் தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டதாகவும் கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.