இந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.