இலங்கைப் பணிப்பெண் ரிசானா றபீக்கிற்கு சவூதி உயர்நீதிமன்றம் மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசும் உள்நாட்டு,சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகமும் கடும் கவலையை வெளியிட்டுள்ளன.
ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.வீட்டுப் பணியாளராகச் சென்ற அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம் எழுதியிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இதனைப் பாராட்டி ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. எமது கோரிக்கைகள் தொடர்பாக சவூதி மன்னர் அக்கறையெடுத்து மன்னிப்பு வழங்க வேண்டுமென நாம் விரும்புகிறோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஹசன் அலி கூறியுள்ளார்.
சவூதி தூதுவரை இன்று (நேற்று) பிற்பகல் நாம் சந்திக்கவுள்ளோம். நிலைமையை அவருக்கு விளக்குவோம். சவூதி அரேபியாவிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதவுள்ளோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.நான் அறிந்தவரை சவூதி அரேபியச் சட்டத்தில் குறிப்பிட்ட சில வரையறைகள் உள்ளன. தீர்மானம் மேற்கொண்ட பின்னர் அதனை மாற்ற முடியாது. அப்பெண் குற்றவாளியென உயர்நீதிமன்றம் இப்போது தீர்மானித்துள்ளது. ஆதலால் அப்பெண்ணின் உயிர் வாழ்வுக்காக நாம் வேண்டுகோள் விடுக்க வேண்டியுள்ளது. இப்போது சவூதி மன்னரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமே அப்பெண்ணின் உயிரைப் பாதுகாக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, இந்த விடயம் குறித்து சவூதி மன்னரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அக்கறையெடுப்பார்களெனத் தான் நம்புவதாகவும் ரிசானாவுக்கு மன்னிப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்ட கோரிக்கையை அவர்கள் பரிசீலிப்பரென்றும் முன்னாள் ஐ.தே.க. எம்.பி. யான ஹுசைன் அகமட் பைலா கூறியுள்ளார்.