யாழ்.மக்களின் நலன்களுக்காக ஜேர்மன் நாடு தொடர்ந்தும் உதவிகளை வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணம் வந்துள்ள ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்தூதுக்குழுவினருக்கும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ். மாகநரசபை கேட்போர் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் மாநகரசபைக்கான புதிய கட்டடங்களை நிர்மானிப்பதற்கும், யாழ்.நகருக்கான குடிநீர் விநியோகத்திட்டத்திற்கும் ஜேர்மன் அரசு உதவி வேண்டும் என மாநகரசபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
யாழ். மக்களுக்காக ஜேர்மன் அரசாங்கம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றதெனவும், கடந்த 20 வருடங்களில் 1.6 மில்லியன் யூரோ பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் ஜேர்மன் நாட்டு நாடாளுமன்றத் தூதுக்குழுவின் தலைவர் ஏனஸ்பேகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் ஒன்று நிறுவப்பட ஜேர்மன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே கொழும்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறான தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.