சென்னை அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த தமிழகத்தை மிரட்டிய “ஜல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்குப் பிறகு அமைதியாகக் கரையைக்கடந்தது.
சென்னை அருகே வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி “ஜல்’ புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்தது.வங்கக் கடலில் சென்னையிலிருந்து 1,300 கி.மீ. தொலைவில் உருவெடுத்த இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு அருகே 320 கி.மீ. தொலைவுக்கு வந்தது. ஆனால் சென்னை அருகே வந்தபோது புயல் வலுவிழந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்குப்பிறகு சென்னையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சென்னை நெல்லூர் இடையே “ஜல்’ புயல் கரையைக் கடந்தது. புயல் மேலும் வலுவிழந்திருந்ததால் 45 முதல் 55 கி.மீ. வேகத்திலான காற்றுடன் லேசான மழை சென்னையில் பெய்தது. படிப்படியாக மழை குறைந்துவிடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.