ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு ‘தேசத்துக்கு நிழல்’ எனும் தேசிய மரம் நடுகைத் திட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள் உட்பட அனைத்து இடங்களிலும் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரங்கள் நடப்படவுள்ளன. இன்று முற்பகல் 10.07 மணியிலிருந்து 10.18 மணி வரையிலான 11 நிமிடங்களிலேயே 11 இலட்சம் மரங்களும் நடப்படவுள்ளன.
எனினும், இத் தேசிய திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் இன்று 20 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. வழமையான மரம் நடுகைத் திட்டங்களைப் போலல்லாது ‘தேசத்துக்கு நிழல்’ எனும் இந்தத் தேசிய மரம் நடுகைத் திட்டத்தைக் கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்வதற்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அலுவலகங்களில் மாத்திரமன்றி வீடுகளிலும் குறைந்தது ஒரு மரத்தையாவது நடுவதற்கு முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.