இவ்வருடம் தேசிய பாதுகாப்புதின நிகழ்வுகள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை ஒருங்கமைப்பதற்காக அமைக்கப்பட்ட 14 உபகுழுக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கூடி கலந்துரையாடல்கள் மேற்கொண்டது.
ஜனாதிபதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பாதுகாப்புதின நிகழ்வகளில் கலந்து கொள்வதை முன்னிட்டு வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினத்தையொட்டி பல நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இயற்கை அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது’ என்கிற தொனிப்பொருளில் 23 ஊர்திகளின் அணிவகுப்பு கண்காட்சியும் இதில் ஒன்றாகும். இந்த அணிவகுப்பு யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ்.நகரைச் சென்றடைந்து மீண்டும் முற்றவெளியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.