புலம்பெயர் முதலீடுகளை கடந்தகாலத் தமிழர் தலைமைகள் முறையாக கையாளவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (13 ) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பொருத்தமான சூழலை உருவாக்குவதல் மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட கால கோட்பாட்டின் அடிப்படையில் தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழலை தமிழ் மக்களும் தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் தமிழ் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டோர் அவற்றை சரியாக கையாளவில்லை எனவும் இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர் எனவும் அமைச்சரினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும், புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *