இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கறுப்புக்கொடி

இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க இந்திய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையை கண்டித்து எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக்கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னைக்கு வர இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்’

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *