கொரி யாவுக்குத் தொழில் வாய்ப்புக்காகப் புதிதாக இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளி நாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. உலக பொருளாதார நெருக்கடி காரணமாக கொரியா மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கமைய இலங்கை உட்பட 15 நாடுகள் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், புதிதாக ஊழியர்களை அங்கு அனுப்புவதே இடைநிறுத்தப்பட்டுள்ளதெனவும் ஏற்கனவே இதற்கென பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இதன் மூலம் பாதிப்பில்லையெனவும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு தென் கொரியா இத்தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் பெப்ரவரி மாதத்திற்குப் பின் இத்தற்காலிகத் தடை நீக்கப்பட்டு புதிய உடன்படிக்கையொன்று மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
கொரியாவிலிருந்து வந்து இரண்டாவது தடவையாக மீண்டும் செல்பவர்களுக்கு இத்தடை எவ்விதத்திலும் பாதிப்பாக அமையாது எனவும் அவர் தெரிவித்தார். தென் கொரியா தமது நாட்டுக்குத் தொழிலுக்காக ஆட்களை இணைத்துக் கொள்ளும் 15 நாடுகளுக் கும் இத்தடை தொடர்பான அறிவித்தலை அனுப்பியுள்ளது. பெப்ரவரிக்குப் பின்னர் கடந்த வருடத்தை விட அதிகளவு இலங்கையரை அங்கு தொழிலுக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடி காரணமாக தென் கொரியாவிலுள்ள பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.