பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் -யாழ். ஆயர் வேண்டுகோள்

jaffna_thomas.jpgபொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“சென்ற மாதம் 31 ஆம் திகதியும் இம்மாதம் 1 ஆம் திகதியும் பரந்தனை அண்மித்த ஏ35 வீதியில் அமைந்துள்ள முரசுமோட்டையில் பொதுமக்கள் குடியிருப்பின்மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 31 ஆம் திகதி 4 பேர் ஸ்தலத்திலேயே இறந்தனர். மேலும், 18 பேர் படுகாயமுற்றனர். மீண்டும் 1 ஆம் திகதி 3 தடவைகள் காலையும் மாலையும் விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 1 பெண் உட்பட 5 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 28 பேர் காயமுற்றுள்ளனர். இக்குண்டுகள் பிரதான வீதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இச்செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அனைவரும் அறியக்கூடியதாகவுள்ளது. எனவே, அப்பாவி மக்கள்மீது நடத்தப்படும் விமானக் குண்டுத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி பணிவுடன் வேண்டுகின்றேன். முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களிலுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் வன்னிப் பிரதேசத்தின் சிறு பகுதிகளுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வேளையில், இவர்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவது மிகவும் மோசமான செயற்பாடாகும். இனி மேலாவது பொதுமக்கள் குடியிருப்புகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுகிறோம். அமைதியை வருவிப்பதற்கான செயற்பாடுகளை, பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அமைதியை நிலைநாட்ட வேண்டுகின்றோம்’.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *