எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்துடன் போலியான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு நாட்டை முழுமையாக காட்டிக்கொடுத்துள்ளாரென தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
தன்னால் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமே யுத்தத்தில் வெற்றியடைவதற்கான அடித்தளம் இடப்பட்டதாக (05) அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளாரென்றும் தேசிய ரீதியாக வெற்றியை கொண்டாடும் இந்த வேளையில் பிரபா- ரணில் போலி போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தேசத்துரோகத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியது மக்கள் பொறுப்பாகுமென்றும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘2002 பெப்ரவரி 21 ஆம் திகதி சைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை எமது தாய் மண்ணின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் முழுமையாக காட்டிக் கொடுத்துள்ளது. இந்த காட்டிக் கொடுப்பின் முதலாவது காரியம் மிலேனியம் சிட்டி அனர்த்தமாகும். இராணுவ பிரிவினருக்குரிய மிலேனியம் சிட்டி இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த சூழ்ச்சிகாரர்கள் ஒன்று கூடியிருப்பதாக கூறி புலனாய்வு பிரிவினரின் பெயர் விவரங்களை புலிகளுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களை கொலை செய்வதற்கு வழிவகுத்தன. அச்சமயத்தில் சுமார் 100 புலனாய்வு உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தவிரவும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து 2006ஆம் ஆண்டு மாவிலாறு மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது வரை போர் நிறுத்தம் என்ற போர்வையில் சுமார் 500 இராணுவத்தினரை படுகொலை செய்தனர். இதில் 34 தமிழ் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தயவால் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எவ்வாறாக இருந்தாலும், அதன் மூலம் புலிகள் தமது கொலைச் செயலை தொடர்ந்து முன்னெடுத்து வலுவான இராஜதந்திரத்தை கட்டியெழுப்புவதற்கும் தேவையான தேசிய மற்றும் சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி புலிகளின் யுத்த பலம், தொலைத் தொடர்பு பலம், நிதி வளம் ஆகியவற்றை பல மடங்கு மேம்படுத்தி எமது இராணுவம் பலவீனமானதென காண்பித்து அவர்களை முகாமுக்குள் முடக்கும் மனோ பாவத்தை நாட்டில் ஏற்படுத்தும் வகையிலும் இவர்கள் செயற்பட்டனர். நிலைமை இவ்வாறிருக்க, நாட்டு மக்களை மேலும் தவறாக வழிநடத்த ரணில் விக்கிரமசிங்க கூறும் இந்தக் கருத்து உண்மைக்கு புறம்பானதாகும். இதனை எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்பதும் எனது நம்பிக்கையாகுமெனவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.